நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம்
மாபெரும் இனப்படுகொலை நடந்த மண்ணில் அதனை மூடி மறைப்பதற்காக ஊடகங்களின் கழுத்தை நெரித்த வரலாறு இலங்கையின் இருண்ட பக்கங்களில் எழுதப்பட்டுள்ளது.
பல ஊடகவியலாளர்கள் இல்லாமல் ஆக்கப்பட்டதும் துன்புறுத்தப்பட்டதும் மனித உரிமை மீறல்களின் மோசமான உதாரணங்கள்.
இலங்கை வரலாற்றில் இனப்படுகொலையின் பொருட்டு குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர நாட்களையே நாம் கண்டிருக்கிறோம்.
மே 03 - உலக ஊடக சுதந்திர தினம்
இந்த நாள் என்பது உலகம் முழுவதும் கருத்துச் சுதந்திரம், தகவல் பரிமாற்ற உரிமை, மற்றும் ஜனநாயகத்தின் அடித்தளமான ஊடகச் சுதந்திரத்தைப் பற்றி சிந்திக்க வைக்கும் ஒரு அரசியல்-சமூக முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும்.
இலங்கையின் சூழலில், இந்த நாள் இன்னும் ஆழமான உரையாடலை வலியுறுத்துகிற நாள் எனலாம். ஏனெனில், இந்நாட்டின் ஊடக வரலாறு வெறும் செய்தித் துறையின் வளர்ச்சியை மாத்திரம் பேசுவதில்லை.
அது படுகொலைகள், பயம், தியாகம், அடக்குமுறையின் நினைவுக் குருதியில் தோய்ந்தது. 1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானத்தின் மூலம் மே 03 ஆம் திகதி உலக சுதந்திர தினமாக “World Press Freedom Day” அறிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படை நோக்கம், மனித உரிமைகள் சாசனத்தின் 19 ஆம் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை உலக நாடுகளுக்கு நினைவூட்டுவதாகும்.
1991 ஆம் ஆண்டு நமீபியாவின் விண்ட்ஹோக் நகரில் ஆபிரிக்க பத்திரிகையாளர்களால் முன்வைக்கப்பட்ட “Declaration of Windhoek” இந்த நாளின் வரலாற்றுப் பின்னணியில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. ஊடகச் சுதந்திரம் என்பது அரசியல் வசதிக்காக வழங்கப்படும் உரிமையல்ல. அது ஒரு மனித உரிமை என்ற உண்மையை இந்தச் சாசனம் வலியுறுத்தியது.
ஆனால் இலங்கையில் ஊடக சுதந்திரம்?
இந்த உயர்ந்த கோட்பாடுகள் இலங்கையில் எவ்வாறு நடைமுறைக்கு வந்துள்ளன என்று பார்த்தால் நாம் குருதியில் தோய்ந்த குறிப்புக்களையே புரட்ட வேண்டியிருக்கும். குறிப்பாக, இனவழிப்புப் போரும் இன முரண்பாடுகளும் தீவிரமடைந்த காலம் தொடக்கம் ஊடகங்கள் தங்களது சுதந்திரத்தை இழந்த சூழலில் இயங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன.
“ஊடகச் சுதந்திரம்” என்ற சொல், இலங்கையில் பலருக்கு உயிரைப் பணயம் வைத்து செய்யும் ஒரு தொழிலாகவே தோன்றியது.
செய்தியாளராக இருப்பது, உண்மையில், ஒரு அபாயகரமான சமூகப் பொறுப்பாக மாறியது. இந்தக் காலகட்டத்தில், பல ஊடகவியலாளர்கள் தங்கள் உயிரை இழந்தார்கள் என்பதை நாம் வேதனையுடன் நினைவுகொள்ள வேண்டியுள்ளது.
தராகி சிவராம், நிமலராஜன், ரவிவர்மன், இசைப்பிரியா, சத்தியமூர்த்தி போன்றோர் மக்கள் அறியும் உரிமைக்காக உயிர் தியாகம் செய்தவர்கள். அதேபோல், லசந்த விக்கிரமசிங்க மற்றும் பிரகீத் எக்னலியகொட ஆகியோருக்கு நேர்ந்த இல்லாமல் செய்தல் கதிகள், உலகின் மிக மோசமான ஊடக சுதந்திர மீறலாகும்.
அத்துடன் இவ்வாறான கொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டல் சம்பவங்கள், மனித உரிமை மீறல்களின் மிகக் கொடூரமான வடிவங்களாகும். இலங்கை ஊடக வரலாற்றில் விடுதலைப் புலிகளின் ஊடக முயற்சிகள் அடக்கப்பட்ட ஊடக சுதந்திரத்திற்கு எதிரான எழுச்சிகளாகும்.
ஊடகவியலாளர்கள் மீது அழுத்தங்கள்
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் செயல்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மிகுந்த அழுத்தங்களையும் கண்காணிப்புகளையும் எதிர்கொண்டனர். அவர்கள் வெளியிட்ட செய்திகள் “தேசிய பாதுகாப்பு” என்ற பெயரில் சந்தேகத்திற்குள்ளாக்கப்பட்டன.
நடுநிலையான செய்தியளிப்பே சில சமயங்களில் பக்கச்சார்பானவை எனப் புரிந்துகொள்ளப்பட்டு, ஊடகவியலாளர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதன் விளைவாக, பலர் கடத்தப்பட்டனர், கைது செய்யப்பட்டனர், அல்லது தங்கள் பணியை விட்டு விலக வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டனர்.
நடராஜா குருபரன், வித்தியாதரன் போன்றோரின் கடத்தல்கள், அக்கால அரசியல் சூழலின் கடுமையை வெளிப்படுத்துகின்றன. இந்தச் சம்பவங்கள் தனிப்பட்டவை அல்ல; அவை ஒரு அமைப்புசார் அடக்குமுறையின் பகுதிகளாகவே பார்க்கப்பட வேண்டும்.
இலங்கையின் முன்னாள் ஆட்சிக் காலங்களில், குறிப்பாக அதிகாரம் மையப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்புகளில், ஊடகங்கள் மீது “இரும்புக் கரம்” கொண்டு கட்டுப்பாடு செலுத்தப்பட்டது. இது நேரடி வன்முறையாகவும், மறைமுக அழுத்தங்களாகவும் வெளிப்பட்டது.
நீளும் தடைகள்
இலங்கையில் உண்மையான ஊடகச் சுதந்திரம் நிலைநிறுத்தப்பட வேண்டுமெனில், கடந்த கால குற்றங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதேசமயம், ஊடகவியலாளர்கள் பாதுகாப்புடன் செயல்படக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும். கருத்து வேறுபாடுகளை ஏற்கும் ஜனநாயக பண்பாடு வளர்க்கப்பட வேண்டும்.
ஆனால் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தொடர்ந்த அரசுகள் மௌனத்தையே கருத்துச் சுதந்திரம் மீதான அடக்குமுறைப் பரிசாக வழங்குகின்றன. அண்மைக் காலங்களில் இலங்கையில் உருவாகியுள்ள புத்தகத் தடைகள் மற்றும் வெளியீட்டு கட்டுப்பாடுகள், எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் புதியதொரு சவால்.
குறிப்பாக அரசியல், இன உறவுகள், போர் நினைவுகள் போன்ற நுணுக்கமான கருப்பொருட்களை தொடும் நூல்கள் கண்காணிப்பு, தாமதம், மறைமுகமான தடை போன்ற நிலைகளுக்கு உள்ளாகின்றன.
இது ஒரு எழுத்தாளரின் தனிப்பட்ட சுதந்திரத்தை மட்டுமல்லாது, வாசகர்களின் அறிதல் உரிமையையும் கடுமையாக பாதிக்கிறது. ஒரு சமூகத்தின் பல்வேறு அனுபவங்களையும் உண்மைகளையும் பதிவு செய்ய வேண்டிய இலக்கியம், இவ்வாறான கட்டுப்பாடுகளால் குறுகிய வட்டத்துக்குள் அடைக்கப்படுகிறது.
சுய தணிக்கைக்கு நிர்பந்திப்பா?
இப்படியான அணுகுமுறைகளின் விளைவாக எழுத்தாளர்கள் தாமாகவே தங்களைத் தணிக்கை செய்யும் மனநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இது வெளிப்படையான தடைகளை விட ஆபத்தானது. எழுத்தாளர்களையும் ஆக்க இலக்கிய முயற்சிகளையும் ஒடுக்கி அறிவியல் தளத்திற்கு செய்யும் மிகப் பெரும் அநீதியாகும்.
கருத்து வேறுபாடுகளை ஏற்காத அரசின் மனப்பான்மை தொடர்ந்தால், இலக்கிய வெளி சுதந்திரமாக இயங்க முடியாத சூழல் உருவாகுவதே அபாயகரமானது. இதில் இப் பத்தி எழுத்தாளர் பாதிக்கப்பட்டவர். அதே போன்று பல தமிழ் எழுத்தாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான நீதியும் தீர்வும் குறித்து எழுத்தாளரின் போராட்டம் தொடரும். உண்மையில், உலக ஊடக சுதந்திர தினம் என்பது இலங்கையில் ஊடகவியலாளர்கள் மகிழ்ச்சியடையும் ஆறுதல் கொள்ளும் ஒரு தினமாக இல்லை என்பதே கசப்பான உண்மை.
கடந்த காலத்தில் உயிர் தியாகம் செய்த ஊடகவியலாளர்களை நினைவுகூர்வதோடு மட்டுமல்லாமல், அவர்கள் போராடிய மதிப்புகளை நிலைநிறுத்தும் முயற்சிகளையும் நாம் வலுப்படுத்த வேண்டும்.
கடந்த காலத்தில் தம்மை தியாகம் செய்தவர்கள் பயமின்றி உண்மையைப் பேசும் ஒரு சமூகத்தை உருவாக்கவே தம்மை அர்ப்பணித்தனர். ஆனால் இன்னமும் அது முழுமையாக நனவாகவில்லை. எழுத்தாளர்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கண்காணிப்பு தொடர்கிறது என்பதே அதற்குச் சாட்சி.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 4 மணி நேரம் முன்