தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவு
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன் (15) நிறைவடையவுள்ள நிலையில் இன்று (14) இறுதிக்கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளை நிறைவடைந்தாலும், புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை தற்போதைய உறுப்பினர்கள் அந்தப் பதவிகளில் நீடிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க கடமையாற்றினார்.
அரசியலமைப்பின் 21வது திருத்தம்
அரசியலமைப்பு விதிகளின்படி, அரசியலமைப்பு சபையால் வழங்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில், ஜனாதிபதி தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தலைவரையும் நான்கு உறுப்பினர்களையும் நியமிக்கிறார்.

2022, ஒக்டோபர் 31 அன்று நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பது சுயாதீன ஆணைக்குழுக்களில் இந்த ஆணைக்குழுவும் ஒன்றாகும்.
ஒரு சுயாதீன மேற்பார்வை அமைப்பாக, தேசிய காவல்துறை ஆணைக்குழு, இலங்கை காவல்துறை மற்றும் அதன் அதிகாரிகள் மீது பரந்த மேற்பார்வை அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
இந்த ஆணைக்குழு முதன்முதலில் 2002 ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் 17வது திருத்தத்தின் கீழ் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |