அதிகாரம் எனக்கிருந்தால் பலரை அனுப்பியிருப்பேன் : அநுர நாடாளுமன்றில் சூளுரை
ஊழல் ஒழிப்புத் தொடர்பில் விசாரணை நடத்தவோ அல்லது தீர்மானம் எடுக்கவோ எனக்கு அதிகாரம் இருக்கும் என்றால் இந்த நாடாளுமன்றத்தில் பலர் இருக்க மாட்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (10), பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுடன் இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“நாட்டின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் இவ்வாறு விசராட்டம் ஆடுகின்றார் என்றால் நாட்டுக்கு என்ன நடக்கும் என்பதை கூறவேண்டியதில்லை. இதற்கு முன்னரும் நான் கூறியுள்ளதையே இப்போதும் கூறுகின்றேன்.
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கோ, அது குறித்து விசாரணை நடத்தவோ, அல்லது தீர்மானம் எடுக்கவோ எனக்கு அதிகாரம் இருக்கும் என்றால் இன்று இந்தச் சபையில் பலர் இருக்க மாட்டார்கள் என்பதை பொறுப்புடன் கூறுகின்றேன்.
அதுமட்டுமல்ல ஊழல் குற்றங்களுக்கு எதிராக போராடும் சகல உரிமையும் எனக்கு உள்ளது. ஆகவே எம்மால் மட்டுமே ஊழல் குற்றங்களை தடுக்கவும் முடியும்.
எனது மனசாட்சிக்கு தெரியும், நான் எந்த ஊழல் குற்றங்களுக்கும் துணை போகும் நபர் இல்லை என்று” என அவர் கூறியுள்ளார்.