தோட்டத்தொழிலாளர் சம்பள விவகாரம்- பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் விடுத்துள்ள அறிவிப்பு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாட்சம்பளத்தை வழங்குவதற்கு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், நாளை மறுதினம் இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், ஸ்ரீலங்காவில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்சம்பளமாக 1000 ரூபாவை வழங்குவதற்கான தீர்மானம் கடந்த வாரம் சம்பள நிர்ணயச் சபையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர், தமது தீர்மானத்தை அறிவிப்பதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 900 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என சம்பள நிர்ணய சபையில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் தமது ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளம் தெரிவித்துள்ளது. சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கினால், தம்மால் செலவுகளை ஈடு செய்துகொள்ள முடியாது என தாம் தொழில் அமைச்சுக்கு வழங்கியுள்ள ஆட்சேபனையில் குறிப்பிடப்பட்டுள்ளது என சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபா உழைக்க முடியுமான விதத்தில், தாம் ஏற்கனவே வழங்கியுள்ள முன்மொழிவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் அதில் குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் எடுக்கவுள்ள தீர்மானம் தொடர்பில் வௌ்ளிக்கிழமை சம்பள நிர்ணய சபையுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்தையின் பின்னர் அறிவிப்பதாகவும் பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அடுத்த மாதம் தொடக்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாட்சம்பளம் அளிக்கப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.