மீண்டும் ரத்த வெள்ளத்தில் சிறிலங்காவை தள்ளும் சூழ்ச்சி - அம்பலத்திற்கு வந்த தகவல்கள்
முறையாக ஆட்சி செய்ய முடியாமல் தோல்வி அடைந்தவர்கள் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஏதேனும் ரத்த வெள்ளத்தில் நாட்டை தள்ளும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura kumara dissanayake) தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு மிகவும் உறுதுணையாக அமைந்தது.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இவ்வாறான தாக்குதல்களை நடத்தினார்கள் என்பது தொடர்பான சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அது தொடர்பில் குரல் எழுப்பி வருகிறார்.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்க பாதிரியார்கள் மீது சேறு பூசும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படுகிறது. சிறிது காலம் தலைமறைவாக இருந்த இனவாத கருத்துக்களை பரப்பும் நபர்கள் தற்போது திடீரென மீண்டும் தோன்றி உள்ளனர்.
முறையாக ஆட்சி செய்ய முடியாமல் தோல்வி அடைந்தவர்கள் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஏதேனும் ரத்த வெள்ளத்தில் நாட்டை தள்ளும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே இந்த விடயம் குறித்து நாட்டு மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றார்.