இளங்குமரனை விமர்சித்த உரையில் சிறீதரனை கடிந்த அர்ச்சுனா!
தேசிய மக்கள் சக்தியின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாத உரையின்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சிறீதரன் எம். பியை சுட்டிக்காட்டி “முழு கள்ளன்” என விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் வடக்கு மாகாணத்துக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதன்போது தேசிய மக்கள் சக்தி தரப்பை நோக்கியும், இளங்குமரன் எம்.பியை சுட்டிக்காட்டியும் கருத்து தெரிவித்த அவர்,
வரவு செலவு திட்ட பங்களிப்பு
“வடக்கு மாகாணத்துக்கு வரவு செலவு திட்ட பங்களிப்பில் நீங்கள் வழங்கியுள்ளது என்ன?
கடந்த ஆண்டை போல விகிதங்களில் குறிப்பிடும் அளவுக்கு கூட இந்த அரசாங்கத்தால் எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை.
மாகாணசபை தேர்தலை நீங்கள் நடத்தப்போவதில்லை. உள்ளுராட்சி தேர்தலில் மைதானம் என்ற கருத்தை பிரசாரமாக மேற்கொண்டீர்கள்.
இந்த அரசாங்கத்தில் அங்கு சென்று அடிக்கல் நாட்டிய எம்.பிக்களும் உள்ளனர். ஆனால் அங்கு புல் கூட நாட்ட முடியாத நிலை காணப்படுகிறது.
மாங்காய் தோட்டம், தேங்காய் தோட்டம் என கூறுகின்றீர்கள். இவையா நாங்கள் கேட்ட அபிவிருத்தி?.
இவை உங்களின் கள்ள அரசியல். அவ்வாறு இருக்க நீங்கள் ஏன் சிறீதரன் எம்பியை சுட்டிக்காட்டுகின்றீர்கள். அவரும் ஒரு முழு கள்ளரே. அவருக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவிக்கின்றேன் என நினைக்கவேண்டாம்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |