மாவீரர் தினத்தில் யாழ் நகரில் இராணுவம் குவிக்கப்பட்டது ஏன்? காரணத்தை வெளியிட்ட கட்டளைத் தளபதி
மாவீரர் தினமாகிய இன்று காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாகவே இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு(General Kodithuwakku )தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடு ஒன்றினைக் கையளிக்கும் நிகழ்வில் ஊடகவியலாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாக காணப்படுகின்றது ஏன் என வினவியதற்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இன்றைய மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ் நகரில் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாக காணப்படுகின்றது எனினும் நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது ராணுவத்தின் கடமையாகும் அதனை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
எந்த சூழ்நிலையிலும் நாட்டினுடைய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு இராணுவத்தினர் ஆகிய நாங்கள் முன்னின்று செயற்படுவோம்.
அதனடிப்படையில் தற்போது காவல் துறையினருக்கு உதவும் முகமாகவே இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.
அத்தோடு சட்டம் ஒழுங்கினை நிலைநிறுத்துவதற்கு காவல் துறையினர் செயற்படுகிறார்கள். அவர்களுக்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு தேவைப்படுமிடத்து இராணுவத்தினரும் களமிறக்கப்படுவார்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.