இராணுவத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 28 பேர் பலி: அரச ஊடகம் தகவல்
சிரியாவில் இராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 28 வீரர்கள் பலியாகியுள்ளதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சிரியாவின் டீர் அல்ஷோர் மாகாணத்தில் இராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
ஈராக் எல்லையை ஒட்டி உள்ள நெடுஞ்சாலையில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண்டைய நகரமான பல்மைராவுக்கு அருகில், பெரும்பாலும் சிரியா இராணுவமும் ஈரானிய ஆதரவு போராளிகளும் தங்கியிருக்கும் பகுதியில் இந்த தாக்குதலை பயங்கரவாதிகள் அரங்கேற்றி உள்ளனர்.
இதுதொடர்பான மேலதிக விடயங்கள் எவையும் பிடைக்கவில்லை எனவும் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. இராணுவ வீரர்கள் மற்றும் அரசாங்க ஆதரவு போராளிகள் விடுப்பு முடித்துவிட்டு, தங்கள் தளத்திற்கு திரும்பி வந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டதாக மூத்த ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
பாலைவன பிராந்தியத்தில் குகைகளில் மறைந்திருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகள், கடந்த சில மாதங்களாக பதுங்கியிருந்து நடத்தும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.