போலி பிரித்தானிய கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது
போலியான பிரித்தானிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஜப்பான் மற்றும் துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற ஈரானிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று (19) இரவு விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர் 47 வயதுடைய ஈரானிய நாட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த நபர் நேற்று (19) இரவு 8:00 மணியளவில் ஜப்பானின் நரிட்டாவுக்குப் புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இந்நிலையில் விமான நிறுவன அதிகாரிகளிடம் அவர் வழங்கிய பிரித்தானிய கடவுச்சீட்டை பார்த்து சந்தேகமடைந்து, அவரது அனைத்து ஆவணங்களுடனும் அவரை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவுக்கு பரிந்துரைத்தனர்.
அங்கு நடத்தப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகளின் போது, கடவுச்சீட்டு போலியானது என்றும், அதற்காக அவர் அந்நாட்டில் உள்ள ஒரு தரகரிடம் 15,000 அமெரிக்க டொலர்களை செலுத்தியதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது பணப்பையை மேலும் பரிசோதித்ததில் அவரது உண்மையான ஈரானிய கடவுச்சீட்டு மற்றும் ஜப்பானின் நரிட்டாவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல்லுக்கு விமான டிக்கெட் ஒன்றையும் வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
இதன்பின்னர் கைது செய்யப்பட்ட குறித்த ஈரானிய பிரஜை மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
