யாழில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக யாழ் (Jaffna) மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பொது மக்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
நலன்புரி நன்மைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் மீண்டும் கோரப்பட்டுள்ள நிலையில் தகுதியுடையவர்களை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன்படி விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை தாம் தொடர்ச்சியாக வசிக்கும் நிரந்தர கிராம அலுவலர் அலுவலகத்தில் அல்லது பிரதேச செயலகத்தில் டிசம்பர் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் தொடர்பாக இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், முதலாம் கட்டத்தில் விண்ணப்பித்தும் வீடுகளிற்கு அலுவலர்கள் வருகை தந்து அவர்களால் தரவுகள் சேகரிக்கப்படாத நபர்கள் மற்றும் தகவல் சேகரிக்கப்பட்டும், நலன்புரி நன்மைகள் சபையின் தரவுத்தளத்தில் தகவல்கள் பதிவேற்றப்படாத நபர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முதலாம் கட்டத்தில் அல்லது இரண்டாம் கட்டத்தில் ஆரம்ப விண்ணப்பம் கோரலின் போது நபர் ஓருவர் தாம் வசித்த கிராம அலுவலர்; பிரிவு அல்லது பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து மாற்றலாகி தற்போது வேறு கிராம அலுவலர்; பிரிவு அல்லது பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் சந்தர்ப்பத்தில் அவர் தற்போது வசிக்கும் தனது புதிய கிராம அலுவலர் பிரிவு அல்லது பிரதேச செயலாளர் பிரிவில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும் நலன்புரி நன்மைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் எண்ணீட்டு பணியானது 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் இடம்பெறும் என நலன்புரி நன்மைகள் சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனக்குறைகளை சமர்ப்பித்தல்
நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதலாம் கட்டத்தில் கொடுப்பனவுக்காக தெரிவு செய்யப்படாமை தொடர்பான மனக்குறைகளை, அதற்கான விண்ணப்பத்தினை தங்களது கிராம அலுவலர் அலுவலகம் அல்லது பிரதேச செயலகத்தில் பெற்று டிசம்பர் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் கிராம அலுவலர் அலுவலகம் அல்லது பிரதேச செயலகத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் தங்களது மனக்குறைகளை தெரிவித்துக்கொள்ள முடியும்.

இத்திட்டம் தொடர்பான மேலதிக விளக்கங்களை தமது பிரதேச செயலக நலன்புரி நன்மைகள் சபை அலகினை தொடர்பு கொள்வதன் மூலம் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்க அதிபர் பொது மக்களுக்கு அறிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |