ஆளும் கட்சியின் கோழைத்தனமான செயல்! ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகம் தாக்கப்பட்டமை தொடர்பில் வெளியான கண்டன அறிக்கை
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்திற்கு திட்டமிடப்பட்ட ஒரு குண்டர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட இழிவான செயலானது நாட்டின் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை என கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்திற்கு முன்பாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் வந்த ஆதவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் முட்டை வீசி தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர்.
இதனைக் கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அந்த அறிக்கையில்,
நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கத் தவறியதால் மக்கள் மத்தியில் அதிருப்திக்குள்ளாகியுள்ள அரசாங்கம், மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான எதிர்க்கட்சியின் தலைமையகம் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலில் மக்களின் கருத்தை நசுக்குவது வருந்தத்தக்க தவறு என்பதை அரசாங்கத்திற்குச் சொல்கிறோம்.
எரிபொருள் நெருக்கடி, எரிவாயு நெருக்கடி, மருந்து தட்டுப்பாடு, அத்தியாவசிய உணவு மற்றும் பானங்களுக்கான பற்றாக்குறை, விலை உயர்வு, போக்குவரத்து சேவை செயலிழப்பினால் நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லாத அராஜக ஆட்சி உருவாகும் இந்நேரத்தில், இத்தகைய கேவலமான செயல்களில் இருந்து அவர்களின் இயலாமையை மறைக்கை முயல்வது தீக்கோழியின் தலையை மணலில் மறைப்பது போன்ற செயலாகும்.
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் அபிப்பிராயத்திற்கு அரசாங்கம் அடக்குமுறையையே தீர்வாகத் தேர்ந்தெடுத்திருந்தால், அதற்கெதிராக மக்களுடன் இணைந்து செயற்பட ஐக்கிய மக்கள் சக்தி ஒரு போதும் தயங்காது என்பதை இங்கு சுட்டிக்காட்டுகிறோம்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகம் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டர்கள் தாக்குதல் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி இதற்குக் காரணமானவர்கள், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று காவல்துறை உட்பட பொறுப்பு வாய்ந்த தரப்பினரிடம் வலியுறுத்தி கூறிக் கொள்கிறோம்.
ஒரே நாடு ஒரே சட்டத்தை யதார்த்தமாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முன் நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இதுபோன்ற கோழைத்தனமான செயல்களால் ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் சார்ந்த வேலைத்திட்டங்களை நிறுத்த முடியாது என்பதை குண்டர்கள் குழுக்களுக்கு நாங்கள் கூறிக்கொள்கிறோம்.
இன்று மக்களை வாட்டி வதைக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் பதில் இல்லை என்பதையே இவ்வாறான சம்பவங்களில் இருந்து தெளிவாகின்றது.
மக்கள் மீதான அடக்குமுறை, ஊடக அடக்குமுறை, சமூக ஊடக அடக்குமுறை, தொழிற்சங்கங்கள் மீதான அடக்குமுறை, ஆர்ப்பாட்டங்களை முடக்குவதற்கான அடக்குமுறைகளிலிருந்து ஜனநாயக அரசியல் கட்சிகளின் அடக்குமுறைக்கு அரசாங்கம் தமது இலக்குகளை மாற்றுவதன் ஊடாக வரப்போகும் ஆபத்திற்கு எதிராக மக்களைத் ஒன்று திரட்டும் போராட்டம் மிக வேகமாக முன்னெடுக்கப்படும் என்பதை வலியுறுத்தி கூறிக் கொள்கிறோம்.
இதற்காக அனைத்து மக்கள் சார்ந்த அமைப்புகளையும் எம்முடன் இனைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம் என அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.