சுருட்டப்பட்ட மில்லியன் கணக்கான டொலர்கள்! இலங்கை புலனாய்வாளர்களுக்கு அவுஸ்திரேலியா பேருதவி
இலங்கை நிதி அமைச்சின் கணினி கட்டமைப்பிற்குள் ஊடுருவி சைபர் குற்றவாளிகள் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திருடிய சம்பவம் தொடர்பாக, அவுஸ்திரேலிய அதிகாரிகள் தற்போது இலங்கை புலனாய்வுத் துறையினருக்கு உதவி வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயத்தை இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு
அவுஸ்திரேலியாவிற்கு வழங்கப்பட வேண்டிய இருதரப்புக் கடன் மறுசீரமைப்பு கொடுப்பனவின் ஒரு பகுதியாக இந்த நிதி இருந்த நிலையில், இதற்கான தீர்வு காலம் 2025 செப்டம்பர் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

எனினும், கடந்த ஜனவரி மாதம் இந்த நிதியைச் சைபர் குற்றவாளிகள் சூட்சுமமாகத் திசைதிருப்பி திருடியுள்ளனர்.
இது குறித்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, இலங்கை தரப்பிலிருந்து உரிய கொடுப்பனவு செலுத்தப்பட்ட பின்னரே, சைபர் குற்றவாளிகள் கணினி கட்டமைப்பில் தலையிட்டு அந்த நிதியை வேறு கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் ஆதரவு
இதன்படி, சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், கான்பெராவிலுள்ள அவுஸ்திரேலிய அதிகாரிகள் இந்த விசாரணைக்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாக கூறியுள்ளார்.

மேலும், இச்சம்பவம் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு அவுஸ்திரேலியா வழங்கும் ஆதரவில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
தற்போது இச்சம்பவம் தொடர்பாக இலங்கையின் பல்வேறு புலனாய்வு அமைப்புகள் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்