ஆட்டோ சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து துணிகர கொள்ளை
மட்டக்களப்பு நகரில் ஆட்டோவை வாடகைக்கு அமர்த்தி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து அவரின் தங்க ஆபரணங்கள், பணம் கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையிட்ட கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
ரிதிதென்னை காட்டு பகுதியில் மயங்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை (28) சாரதியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.
வாடகைக்கு பிடிக்கப்பட்ட ஆட்டோ
இது பற்றி தெரியவருவதாவது நகரின் சின்ன ஆஸ்பத்திரி ஆட்டோ தரிப்பிடத்தில் இருந்து வாடகைக்கு சவாரி செய்துவரும் பூநொச்சி முனையைச் சேர்ந்த 62 வயதுடைய ஆட்டோ ஓட்டுநர் சம்பவ தினமான நேற்று(27) பிற்பகல், இரவு சாப்பாட்டிற்கு இடியப்பம் வாங்கி கொண்டு 7 மணிக்கு வருவதாக உறவினருக்கு தொலைபேசியில் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து ஆட்டோ தரிப்பிடத்தில் இருந்து குறித்த ஆட்டோவை ஒருவர் வாழைச்சேனை வரை செல்வதற்காக வாடகைக்கு அமர்த்தி கொண்டு சென்றுள்ளார். இரவு 11.00 மணியாகியும் வீடு திரும்பாததையடுத்து ஆட்டோ சாரதியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை (28) வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள ரிதி தென்னை காட்டு பகுதியை அண்டிய பகுதியில் ஆட்டோ ஒன்றில் ஒருவர் மயங்கி கிடப்பதை கண்டவர்கள் காவல்துறைக்கு தெரியப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மயக்கத்தில் கிடந்த சாரதியை மீட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
குறித்த ஆட்டோவை வாடகைக்கு அமர்த்தி சென்று அவருக்கு மயக்க மருந்து தெளித்து அவரின் ஒரு பவுண் தங்க மோதிரம், பணம் மற்றும் கையடக்க தொலைபேசியை கொள்ளையர்கள் கொள்ளையிட்டுவிட்டு அவரை காட்டு பகுதியில் விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மட்டு தலைமையக மற்றும் வாழைச்சேனை காவல்துறையினர் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |