இசாலினி சடலம் மீதான ஒன்பது மணி நேர பிரேத பரிசோதனை நிறைவு - முழுமையான விபரம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த நிலையில், தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த இஷாலினியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனை இன்று (31) நிறைவு பெற்றது.
மூன்று விசேட வைத்திய நிபுணர் அடங்கிய குழுவினால் பேராதனை போதனா வைத்தியசாலையில் இந்த பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 8:30 மணி முதல் மாலை 5:15 மணி வரையான 9 மணிநேரத்தில் இந்த பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இஷாலினியில் சடலம் மீது முதலில் CT ஸ்கான் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். உடலின் உள்ளே, உள் காயங்கள் காணப்படுகின்றனவா?, எலும்புகள் முறிந்துள்ளனவா? என்பன தொடர்பில் CT ஸ்கான் மூலம் ஆராயப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அதனைத் தொடர்ந்து, நீண்ட நேரம் பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடலின் சில பகுதிகளிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மாதிரிகள் ஆய்வு கூட பரிசோதனைகளுக்கு உட்படுத்த விசேட வைத்திய குழு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த அனைத்து தரவுகளும் சேகரிக்கப்பட்டதன் பின்னர், இரண்டாவது பிரேத பரிசோதனை தொடர்பான முழுமையான அறிக்கை வெளியிடப்படும் என அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
பிரேத பரிசோதனையின் அறிக்கை முடிவுகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் இடம்பெறும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.