மட்டக்களப்பில் செவ்வந்தியின் பாணியில் செயற்பட்டு வந்துள்ள போலி சட்டத்தரணி!
மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடை போல அணிந்து உள்நுழைந்து வழக்காடி தருவதாக பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்ததுடன் சில சட்டத்தரணிகளையும் ஏமாற்றி வந்துள்ள போலி சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை நேற்று சனிக்கிழமை (08) ஒந்தாச்சி மடத்தில் வைத்து கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், இந்த விடயம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலி சட்டத்தரணியின் பின்னணி
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
மாவட்டத்தில் உள்ள பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் தங்க ஆபரணங்கள் திருட்டு போன சம்பவம் தொடர்பாக மீட்கப்பட்ட தங்க ஆபரணங்களை நீதிமன்றில் இருந்து மீளப் பெறுவது தொடர்பாக மட்டக்களப்பு நீதிமன்றில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணைக்கு வழக்காடுவதற்கு நல்ல சட்டத்தரணி ஒருவரை தேடிய நிலையில் அவருக்கு அறிமுகமான ஒருவர் தனது வழக்காடிய நல்ல சட்டத்தரணி இருப்பதாக போலி சட்டதரணியின் தொலைபேசி இலக்கத்தை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் அந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்ட நிலையில் போலி சட்டத்தரணி தான் அந்த தங்க ஆபரணங்களை மீட்டு தருவதாகவும் இதனை மிக விரைவாக மீட்பதற்கு நீதிமன்றத்தில் சிலருக்கு பணம் வழங்க வேண்டும் வழக்கு தொகையாக என 2 இலட்சம் ரூபாய் கோரியுள்ளார்.
அதற்கு குறித்த பெண் சம்மதித்து அவருக்கு முற்பணமாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளதை அடுத்து சில தினங்களின் பின்னர் கடந்த ஒக்டோபர் மாதம் வழக்கிற்கு நீதிமன்றத்துக்கு வருமாறு கடிதம் வந்துள்ளது.
இந்த நிலையில், போலி சட்டத்தரணி தான் முன்நகர்வு பத்திரம் தாக்கல் செய்ததை அடுத்து வழக்கிற்கு வருமாறு அழைப்பு கடிதம் வந்துள்ளதாக குறித்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது குறித்த பெண் நவம்பர் மாதம் திகதியிடப்பட்ட வழக்கை முன்கூட்டியே பணம் வழங்கி 3 தினங்களில் நீதிமன்றத்துக்கு வருமாறு அழைப்பு கிடைத்துள்ளது அவர் நல்ல சட்டத்தரணி என எண்ணிக் கொண்டார்.
இதனையடுத்து அங்குள்ள சட்டத்தரணி ஒருவருடன் தொடர்பு கொண்டு தான் கொழும்பு உயர் நீதிமன்ற சட்டத்தரணி என அறிமுகப்படுத்தி கொண்டு எனக்கு கல்முனை திருகோணமலை போன்ற உயர் நீதிமன்றங்களில் வழக்கு இருப்பதாகவும் தனது வாடிக்கையாளர் ஒருவரின் குறித்த வழக்கை எடுத்து நடாத்துமாறு கோரியதை அடுத்து அந்த சட்டத்தரணி அந்த வாடிக்கையாளரை என்னை சந்திக்க அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.
தப்பியோடிய சந்தேகநபர்
இதனையடுத்து சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பாக மட்டக்களப்பு நீதிமன்றத்தில் உள்ள குறித்த சட்டத்தரணியை பெண் சந்தித்து வழக்கு தொடர்பாக தெரிவித்ததையடுத்து 3 வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகி வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (6) வழக்கு விசாரணைக்காக குறித்த பெண் மற்றும் போலி சட்டத்தரணி சென்றுள்ள நிலையில் ஏற்கனவே வழக்கிற்கு முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி இந்த போலி சட்டத்தரணி தொடர்பாக சந்தேகம் எழுந்ததையடுத்து அவரை அங்கிருந்து பதிவாளர் காரியாலயத்துக்கு அழைத்துச் சென்று இவர் சட்டத்தரணியா? என உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளார்.
அதனையடுத்து நீதிமன்ற பதிவாளர் போலி சட்டத்தரணியிடம் அடையாள அட்டையை கோரியபோது அவர் தனது வாகனத்தில் இருக்கிறது எடுத்து கொண்டு வருவதாக தெரிவித்து அங்கிருந்து சட்டத்தரணிகள் வாகனம் நிறுத்தும் பகுதிக்கு சென்று தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த போலி சட்டத்தரணி தொடர்பாக நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து காவல்துறையினரிடம் முறைப்பாடு பதிவு செய்து குறித்த போலி சட்டத்தரணி நேற்று சனிக்கிழமை இரவு ஓந்தாச்சி மடத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு வெளியில் உள்ள சட்டத்தரணிகள் காரியாலயங்களுக்கு சென்றும் மற்றும் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தான் கொழும்பு உயர் நீதிமன்ற சட்டத்தரணி என (விசிட்டிங் காட்) அடையாளப்படுத்தும் அட்டை, காட்டி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு எனக்கு திருகோணமலை கல்முனை, வாழைச்சேனை போன்ற நீதிமன்றங்களில் வழக்கு இருப்பதாகவும் அங்கு முன்னிலையாக வேண்டியுள்ளதாக தான் ஒரு பிரபல சட்டத்தரணி போல வழக்குகள் அதிகமாக இருப்பது போல காட்டிக் கொண்டு தனது வாடிக்கையாளர்களின் வழக்கு விசாரணைகளுக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோரியுள்ளார்.
இவ்வாறு போலி சட்டத்தரணி தனது பல வாடிக்கையாளர்களை பல சட்டத்தரணிகளுக்கு வழங்கியுள்ளதுடன் வாடிக்கையாளர்களிடம் தனது சிரேஷ்ட, கனிஷ்ட சட்டத்தரணிகள் என அறிமுகப்படுத்தி கொண்டு வழக்கு தொகையாக பல இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சட்டத்தரணி போல நீதிமன்றத்திற்குள் தனது வாகனத்துடன் உள்நுழைந்து சட்டத்தரணிகள் வாகனம் நிறுத்தும் பகுதியில் தனது வாகனத்தை நிறுத்தி நீதிமன்ற வளாகத்திற்குள் நடமாடி வந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து சட்டத்தரணி என அடையாளப்படுத்தும் போலி வருகை அட்டை மற்றும் இறப்பர் முத்திரை, சட்டத்தரணி என வாகனத்துக்கு அடையாளப்படுத்தி ஒட்டப்படும் ஸ்டிக்கர், கறுப்பு கழுத்துப்பட்டி, கோட் சூட், வழக்குகளை கொண்ட 16 பையில்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன் அவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு பெரும் குற்ற தடுப்பு பிரிவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |