திருமலையில் சர்ச்சையை கிளப்பிய பௌத்த பிக்கு வழக்கு: தீர்மானம் நீதிமன்றத்தால் ஒத்திவைப்பு
பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட ஆறு பேரை விளக்கமறியலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றில் விசாரணை
இன்று குறித்த தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்த போதிலும், தீர்ப்புரை இன்னும் முழுமையாகத் தயாராகவில்லையென மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் அறிவித்திருந்தார்.

இதற்கமைய தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி அறிவிக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நகர கரையோரப் பாதுகாப்பு வலயத்தினுள் அனுமதியின்றி கூடாரமொன்றை அமைத்து புத்தர் சிலையொன்றை ஸ்தாபித்ததாக, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம் செய்த முறைப்பாடு தொடர்பான வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |