ரஷ்ய எரிவாயுக் குழாய்களின் வெடிப்புகளுக்கு நாசவேலையே காரணம்
பால்டிக் கடல் ஊடாக ஐரோப்பாவுக்கு ரஷ்ய எரிவாயுவை விநியோகிக்க நிர்மாணிக்கபட்ட எரிவாயு குழாய்களில் கடந்த செப்டம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெடிப்புகளுக்கு நாசவேலைகளே காரணம் என சுவீடனில் நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணைகளில் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை அடுத்து ரஷ்ய எரிவாயுவை ஜேர்மனிக்கு கொண்டு செல்வதற்காக நிர்மாணிக்கபட்ட எரிவாயு குழாய்களும் சர்ச்சைக்குரிய மையங்களாக மாறியிருந்தன.
எரிவாயு விநியோகம்
மேற்குலகின் பொருளாதாரத் தடைகளுக்குப் பழிவாங்கும் வகையில் ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகத்தை ரஷ்யா கடுமையாக குறைத்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த விநியோக குழாய்களில் மர்மமான முறையில் நான்கு பெரிய வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
இதனையடுத்து கடலுக்கடியில் எரிவாயு கசிவுகள் கண்டுபிடிப்பட்டிருந்தன. இந்தக் கசிவுகள் சுவிடன் மற்றும் டென்மார்க் கடற்பிராந்தியங்களில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த சம்பவங்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இந்த வெடிப்புகளுக்கு நாசவேலைகளே காரணம் என சுவீடனில் நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணைகளின் முடிவுகளில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
நோர்த் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்
வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் வெடிபொருட்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கசிவுகளுக்கு முன்னதாக வெடிப்புகள் ஏற்பட்டமை உறுதிப்படுத்தபடுள்ளதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் இந்த குற்றங்களை செய்தவர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கு இந்த ஆதாரங்கள் உதவியாக இருக்கும் எனவும் அறிவிக்கபட்டுள்ளது.
நோர்த் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களின் நாசவேலை மற்றும் கருங்கடலில் தாக்குதல் ஆகியவற்றில் பிரித்தானியா ஈடுபட்டதாக ரஷ்யா குற்றம் சாட்டுவது குறிப்பிடத்த்ககது.