அமைச்சுப் பதவியை துறக்கத் தயார் - அறிவிப்பை வெளியிட்ட பந்துல
ச.தொ.ச உட்பட சுப்பர் மார்கட்களில் புத்தாண்டு காலப்பகுதியில் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த சலுகை பொதிகளில் ஊழல் - மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக நிரூபிக்கப்பட்டால் அமைச்சுப் பதவியை ஒரு மணித்தியாலத்தில் துறந்துசெல்வேன் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அமைச்சின் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பரிமாற்றங்கள் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் புத்தாண்டு காலப்பகுதியில் பொது மக்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் 12 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சலுகை பொதியொன்று ச.தொ.ச உட்பட சுப்பர் மார்க்கட்களில் பெற்றுக்கொடுத்தோம்.
ஆனால், இந்த பொதியில் தரமற்ற பொருட்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களை கைதுசெய்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் சலுகைகளுக்கு அபக்கீரித்தியை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சமூக நீதிக்கான இயக்கம் கொம்பனி வீதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சதொச நிறுவனத்தின் தலைவர், கூட்டுறவு நிறுவனங்களின் தலைவர், தேயிலை வழங்குனர் சபையும் கொம்பனிவீதி பொலிஸில் இதுதொடர்பில் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளார்.
சலுகை பொதியில் ஊழல் - மோசடிகள் இடம்பெற்றிருப்பது நிரூபிக்கப்பட்டால் ஒரு மணத்தியாலம் கூட நாடாளுமன்றத்தில் இருக்க மாட்டேன் என்பதுடன் பதவியை இராஜினாமா செய்துவிட்டுச் செல்வேன்.
மனச்சாட்சிக்கு உட்பட்டு அர்ப்பணிப்புடன் நாம் செயற்படுகின்றோம். ஆகவே, நான் எவரையும் கைதுசெய்யுமாறு கூறவில்லை என்றார்.