கடும் நெருக்கடியில் தத்தளிக்கும் சிறிலங்கா! இந்தியா பறந்தார் பசில்
சிறிலங்காவின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார்.
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை இறுதி செய்வதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று இந்தியா செல்வார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் சற்று முன்னர் புறப்பட்டு சென்றுள்ளார்.
இதன்போது இரண்டு நாட்கள் இந்தியாவில் அவர் தங்கியிருப்பார் என்றும் நிதி தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகிய இருவரும் கடந்த வாரம் நடாத்திய தொலைபேசி உரையாடலில் இப் பயணத்திற்கான முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இவ் உரையாடலின் போது இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று ஜெய்சங்கர் உறுதியளித்தார்.
இதேவேளை, இவ் ஆண்டு ஜனவரி இடம் பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் இறக்குமதி செய்வதற்கான 1 பில்லியன் டொலர் கடனையும் மற்றும் இந்தியாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கான 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியையும் விரிவுபடுத்துவதற்கான முன்னேற்றத்தை இரு அமைச்சர்களும் ஆய்வு செய்திருந்தனர்.
மார்ச் 10 அன்று எரிபொருள் கொள்வனவு செய்வதற்கான 500 மில்லியன் அமெரிக்க டொலரை இந்தியவின் ரிசர்வ் வங்கி (RBI) வழங்கியிருந்தது.