அமெரிக்கா புறப்பட முன்னர் அனைத்தையும் தயார் செய்த பசில் - வெளிவந்துள்ள தகவல்
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில், நாட்டில் அனைவரும் எதிர்பார்த்துள்ள மாற்றம் புதிய நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பமாகும் எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி ஏற்படுத்தப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அமைப்பின் உறுப்பினர் புத்திக விக்ரமாதர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அமைச்சர் பசில் ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணம் பற்றி மக்கள் பேசுகின்றனர். அவரது தலைமையின் கீழ் நாட்டிக்காக மாற்றம் ஒன்று ஏற்படும் என நாங்கள் அனைவரும் பொறுமையின்றி காத்திருக்கின்றோம்.
அவர் சென்று, வரும் இடங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். அவர் குறுகிய விடுமுறையை முடித்துக்கொண்டு துரிதமாக திரும்பி வருவார்.
அனைத்தும் தயார்ப்படுத்தப்பட்ட பின்னணியிலேயே அவர் நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். நிதியமைச்சர் மீண்டும் நாடு திரும்பிய பின்னர், நாட்டின் அபிவிருத்திக்காக ஏனைய அனைவரும் தமது கடமைகளை சரியாக நிறைவேற்ற வேண்டும்” எனவும் புத்திக விக்ரமாதர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் பதில் நிதியமைச்சராக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.