மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீதி!
மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட ஆனைகட்டியவெளி நெடியவட்டை பிரதான வீதி அண்மையில் பெய்த பலத்த மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக அவ்வீதியைப் பயன்படுத்தும் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
வருடாந்தம் மாரி மழைகாலத்தில் இவ்வீதி இவ்வாறு சேதமடைவதும், அதனை அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சிரமதானத்தின் மத்தியில் புனரமைப்பு செய்வதுமாகத்தான் இதுவரையில் இருந்து வருகின்றது.
விவசாய வீதியாகக் காணப்படும் இவ்வீதியை இனிமேலும் சம்மந்தப்பட்டவர்கள் கவனிக்காமல் விடாது உடன் அதனை நிரந்தரமாகப் புனரமைப்புச் செய்துதர வேண்டும் என அவ்வீதியைப் பயன்படுத்தும் மக்களும், விவசாயிகளும், கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
இவ்வீதியின் புனரமைப்பு தொடர்பில் போரைதீவுப் பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனியிடம் வினவிய போது,
குறித்த வீதி வருடாந்தம் இவ்வாறு மாரிமழை காலத்தில் பழுதடைவது வழக்கமாகவுள்ளது. இந்த வீதி கமநல சேவைத் திணைக்களத்திற்குச் சொந்தமானது.
இந்த வீதியை எமது பிரதேச சபைக்குக் கையளிக்குமாறு நாம் பலதடவை கோரிக்கை விடுத்துள்ள போதிலும் அதனை அவர்கள் செய்யாமலுள்ளார்கள்.
இருந்தும் கடந்த வருடம் நாம் அவ்வீதியை ஓரளவு புனரமைப்பு செய்தோம். அது தற்போது மீண்டும் உடைப்பெடுத்துள்ளது என அவர் தெரிவித்தார்.