எமது மண் வளத்தை மாற்றானுக்கு விற்பனை செய்வதை நிறுத்து- அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள்!
விவசாயத்திற்கு உரத்தை வழங்கக்கோரி மட்டக்களப்பில் ஆரப்பாட்டங்கள் இடம்பெற்றன.
விவசாயிகளின் ஒத்துழைப்புடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டிருந்தனர்.
வெல்லாவெளி கமநல பிரிவுக்கு முன்னால் இன்று காலை 8 மணியளவில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போ து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அரசே உடன் உரம் வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு ஒளி வேண்டும், மண்வளத்தை மாற்றானுக்கு விற்பனை செய்வதை நிறுத்து, உரம் இன்றி உழவு இல்லை போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்திற்கு எதிரான விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கொக்கட்டிச்சோலை, ஆயித்தியமலை, வந்தறுமூலை, கிரான் ஆகிய இடங்களில் அமைந்துள்ள கமநல கேந்திர நிலையங்களிற்கு முன்னாலும் போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.