பிள்ளையான் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட வீதி அபிவிருத்தி திட்டத்தில் பாரிய மணல் கொள்ளை!
வீதி அபிவிருத்தி என்ற போர்வையில் சித்தாண்டி சந்தனமடுவில் பாரிய மணல் கொள்ளை இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு செங்கலடி செயலாளர் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி மூன்று கிராம சேவகர் பிரிவிலுள்ள சந்தனமாடு ஆற்றில் அண்மைய தினங்களாக இரவு வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழப்பட்டு வருவதாக தெரிவித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆற்றில் 2015ஆம் ஆண்டில் இருந்து தற்பொழுது வரைக்குமான காலப் பகுதியில் மணல் அகழ்வு முற்றுமுழுதாக இடைநிறுத்தப்பட்டு தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது வீதி அபிவிருத்தி என்ற போர்வையில் சித்தாண்டி சந்தனமடு ஆற்றி பாரிய சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தெரிவித்து ஏறாவூர் போலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மணல் அழ்வை தடுக்க வேண்டும் எனத் தொரிவித்து அக்காலப் பகுதியில் 11 இளைஞர்கள் சித்தாண்டி முருகன் ஆலய முன்றலில் உண்ணாவிதம் இருந்து மணல் அகழ்வை முற்று முழுதாக நிறுத்தினர். கடந்த ஜூன் மாதம் 19ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் தலைமையில் சித்தாண்டி புதுவழி பிள்ளையார் ஆலயத்திலிருந்து சந்தனமடு ஊடாக இரண்டு கிலோமீட்டர் கொங்கிறீட் வீதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு தற்பொழுது குறித்த வீதி அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
வீதியானது வீதி அதிகார சபையினால் ஒப்பந்தக்காரர் ஒருவருக்கு வழங்கப்பட்டு அபிவிருத்தி இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் வீதி அபிவிருத்திக்கு தேவையான மணலை இரவு வேளையில் சுமார் 300 கீப் அளவிலான 7 மணல் குவியல்களாக குவிக்கப்பட்டு பாரிய சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றிருக்கின்றதாக அப்பகுதியைச் சேர்ந்த பலர் தெரிவிக்கின்றார்கள்.
மணல் அகழ்வு இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் வரையிலான ஆற்று மணல் பரப்பில் தொடர்ச்சியாக கடந்த 6 வருடங்களுக்கு மேலாக பனம் பழ விதைகள் நடப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டியில் பாரிய வெள்ளம் ஏற்பட்டு வருகின்ற நிலையில் அதற்குக் காரணமாக இருக்கின்ற மணல் அகழ்வை தடுத்து நிறுத்துவதற்காக கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக சித்தாண்டி சிகண்டி அறக்கட்டளை நிலையம் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து குறித்த பகுதியில் தொடர்ச்சியாக விதை நடப்பட்ட நிலையில் பனை மரங்கள் வளர்ந்து வருகின்றது.
குறித்த பகுதியில் அடிக்கடி சட்டவிரோத மணல் அழ்வில் ஈடுபடுகின்ற ஒரு சில நபர்களுக்கு, இணக்க சபை மூலமாக பனம் விதைகள் நடப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், சூழலையும் வெள்ளப் பெருக்கையும் குறித்த ஆற்றினுடைய நிலப்பரப்பையும் பாதுகாத்துக் கொள்வதற்காக இவ்வாறாக நடப்படுகின்றது. இந்நிலையிலேயே வீதியின் அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தக்காரர்கள் மூலமாக இந்த மணல் அகழ்வு இரவோடிரவாக அப்பகுதியில் இருந்து அகழப்பட்டிருப்பதாக பொது அமைப்புக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பல பனை மரங்கள் பிடுங்கி வீசப்பட்டும் பல மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இவ்வாறான நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் மு. முரளிதரன் உட்பட சிகண்டி அறக்கட்டளை நிலைய உறுப்பினர்கள் அப்பகுதிக்கு பொறுப்பான கிராமசேவகர் உட்பட பலர் நேற்று பிற்பகல் சென்று பார்வையிட்டதுடன் கருத்துக்களையும் தெரிவித்தனர்.
பின்னர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தனர். அதன் பின்னர் முறைப்பாடு செய்த பிரதேச சபை உறுப்பினர் உட்பட பொலிஸார் மற்றும் அதிகாரிகள் பலரும் குறித்த இடத்தை பார்வையிட்டனர். பொலிஸார் அந்த இடத்தை பார்வையிட்டதுடன் ஆதாரங்களையும் பெற்றுக் கொண்டனர்.
வெள்ளப்பெருக்கை தடுப்பதற்காக ஆற்றின் மணல் பகுதியில் பனம் விதைகள் நடப்பட்டு அவை அழிக்கப்பட்டு அபிவிருத்தி என்ற போர்வையில் ஆற்று மணலை இரவோடு இரவாக கபளீகரம் செய்யும் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கிறோம் பொலிஸான் முறையான தீர்வு கிடைக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாட இருக்கின்றோம் எனவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.












