பயங்கரவாத இன வன்முறையைால் மூன்று தசாப்தமாக பயன்பாடற்றுக் கிடக்கும் முக்கிய நிலையம்!
ஏறாவூர் நகர சந்தையை மீளத் திறக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முப்பது வருடங்களாக மூடப்பட்டு காடுமண்டிக் கிடக்கும் நிலையிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டு காடுமண்டிக் கிடக்கும் ஏறாவூர் நகர சபைக்குச் சொந்தமானதும் மட்டக்களப்பு- கொழும்பு நெடுஞ்சாலையருகே அமைந்துள்ளதுமான சந்தையை மீளத் திறக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எம்.ஆர். சியாஹல் ஹக் தெரிவித்தார்.
அந்தச் சந்தையின் வியாபார நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சந்தையில் வியாபாரம் செய்வதற்கான குத்தகை உரிமையினைப் பெற்றிருந்தவர்கள் இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து இந்தச் சந்தையில் வியாபாரம் செய்ய விரும்பினால் உரிய ஆவணங்களுடன் வர்த்தமானி அறிவித்தலுக்கமைவாக எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதிக்கு முன்னர் நகர சபைச் செயலாளரிடம் கையளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
எனவே சந்தை வியாபாரிகள், இச்சந்தையில் ஏற்கெனவே தாங்கள் வியாபாரம் செய்ததை மேற்குறிப்பிடப்பட்ட காலப் பகுதிக்குள் உரிய ஆவணங்களுடன் உறுதிப்படுத்தத் தவறும் பட்சத்தில் அந்த சந்தையின் குத்தகை உரிமையினை இழந்தவராகக் கருதப்படுவதோடு குத்தகை உரிமம் தொடர்பான இழப்பிற்கு நகர சபை எவ்விதத்திலும் பொறுப்பாகாது எனவும் நகர சபைச் செயலாளர் தெரிவித்தார்.
ஏறாவூர் சந்தையில் 1990ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் மூவின மக்களும் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
1990ஆம் ஆண்டு இப்பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட்ட பயங்கரவாத இன வன்முறைகளைத் தொடர்ந்து சந்தை நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்ததோடு ஏறாவூர் நகர சபை அலுவலகமும் முற்றாக சேதப்படுத்தப்பட்டு எரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


