மட்டக்களப்பில் பரிதாபமாக பலியான கர்ப்பிணித் தாய்!
மட்டக்களப்பில் கர்ப்பிணித் தாய் ஒருவர் டெங்கு நுளம்புக் காய்ச்சலினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனை பேத்தாழை பிரதேசத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான 26 வயதுப் பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் இடம்பெற்ற முதலாவது டெங்கு மரணம் இது எனப் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கணேசலிங்கம் கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான பெண்
குறித்த பெண் கடந்த 17 ஆம் திகதி காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் அவர் ஏழாம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனையில் அவருக்கு டெங்கு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதன் பின்னர் 18 ஆம் திகதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு வைத்திய நிபுணர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் அவர் 21 ஆம் திகதி சுகப்பிரசவம் மூலம் ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துக்கொண்ட நிலையில், அவருக்குத் தொடர்ந்து இரத்தப்போக்கு ஏற்பட்டதனால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டுச் சுமார் 12 பைண்ட் இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து அவருக்குச் சிகிச்சை அளித்து வந்தபோதும் டெங்கு நோய் கட்டுப்பாட்டிற்கு வராத நிலையில் அவரின் இருதயம், மூளை மற்றும் சிறுநீரகம் செயலிழந்து கொண்டிருந்த நிலையில் அவர் 25 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 10.00 மணிக்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |