மட்டக்களப்பில் வேட்பாளர் பட்டியலில் கையொப்பம் இடச்சென்றவர் தப்பியோட்டம்
மட்டக்களப்பில் (Batticaloa) வேட்பாளர் பட்டியலில் கையொப்பம் இடச்சென்ற நபர் ஒருவர் தப்பியோடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.
இந்தநிலையில், போரதீவுப்பற்று உள்ளுராட்சி மன்றத்திற்கு வேட்பாளரை தேர்வு செய்வதற்கு குறிப்பிட்ட அரசியல் கட்சி ஒன்று மிகவும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளது.
பிரதேச வட்டாரம்
இதனடிப்படையில், அப்பிரதேசத்திலுள்ள வட்டாரம் ஒன்றில் போட்டியிடுவதற்காக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை குறிப்பிட்ட அரசியல் கட்சி கட்டாயத்தின் பெயரில் அவர்களுடைய வாகனத்தில் ஏற்றியுள்ளது.
இதையடுத்து, விண்ணப்பத்தில் கையொப்பம் இடுவதற்காக களுவாஞ்சிகுடிப் பகுதியில் அமைந்துள்ள அக்கட்சிக் காரியாலயத்திற்கு நேற்றையதினம் (19) சென்றுள்ளனர்.
குறித்த நபரை ஏற்றிக் கொண்டு சென்ற வாகன சாரதி அக்காரியாலயத்தின் முன்னால் அமைந்துள்ள வீதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே செல்லுங்கள் என குறித்த நபரிடம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அந்த நபர் நான் உள்ளே சென்று கையொப்பம் இடுகின்றேன் எனக் கூறிவிட்டு அருகிலிருந்த பற்றைக் காடுகள் ஊடாக தப்பி ஓடி கால்நடையாகவே நடந்து போரதீவுப் பற்றுப் பிரதேசத்திலுள்ள அவரது வீட்டிற்குச் சென்று சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல் கட்சி
அரசியல் கட்சி ஒன்றின் வாகனத்தில் சென்ற நீங்கள் ஏன் நடந்து வருகின்றீர்கள் என அவரது வீட்டிலுள்ளோரும், கிராமத்தவர்களும் அவரிடம் வினவியுள்ளனர்.
எனக்கு அரசியல் சரிவராது நான் முடியாது முடியாது, என தெரிவித்திருந்தும் என்னை கட்டாயத்தின் பெயரிலேயே ஏற்றிக் கொண்டு சென்றனர் என தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, நான் அவர்களின் தேர்தல் பிடியிலிருந்து அவர்களுக்குத் தெரியாமலேயே தப்பிப் பிழைத்து கடந்து வந்துவிட்டேன் எனவும் அவர் பதிலளித்துள்ளார்.
இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் அரசியற் கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் மிகவும் பிரயத்தனத்திற்கு மத்தியிலேயேதான் அனுபவமில்லாதவர்களையும் மற்றும் கல்வியறிவு குறைந்தவர்களையுமே களமிறக்கியுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்