“கருப்பு ஜூலை” தமிழ் இனப்படுகொலை தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை- தமிழருக்கு அறை கூவல்!
கருப்பு யூலை தமிழ் இனப் படுகொலை தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும். இதை முறியடிப்பதற்கு தமிழர்கள் ஓற்றுமையாக செயற்படுவோம் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கை அரசினால் நன்கு திட்டமிடப்பட்டு 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழின படுகொலையை நிறைவேற்றி 53 தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அக்காலப் பகுதியில் தமிழர்கள் நிரந்தரமாக வாழ்ந்த, நிரந்தர வாழ்வாதார கட்டமைப்பைக் கொண்ட, கலாசார அடையாளங்களைக் கொண்ட, இடங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
மேலும் கல்வியில் ஆளுமை பதித்த, தமிழர்கள் தலைமமைத்துவத்தினால் ஆளுமை செலுத்திய, பொருளாதார கட்டமைப்புள்ள இடங்களை அடையாளப்படுத்தி அழித்தும், எரிக்கப்பட்டும், இடம் பெயர வைத்தும், வெட்டிகொலை செய்தும், கடத்தி கொலை செய்தும், காணாமலாக்கப்பட்டும், தமிழர்கள் வாழ்ந்த தென்னிலங்கைப் பகுதியிலேயே அகதிகளாக்கப்பட்டும் தமிழர்களின் பலமான தளங்கள் ஸ்ரீலங்கா அரசினால் இல்லாமலாக்கப்பட்டன.
இவ்வாறான தமிழின அழிப்பிற்கு யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலி, தபால்பெட்டி சந்தியில் யூலை 23 ஆம் திகதி அன்று 13இராணுவ வீரர்கள் கண்ணி வெடியில் கொல்லப்பட்டதை வைத்துக் கொண்டு யூலை 24 ஆம் திகதி கொழும்பிலுள்ள கனத்தை மயானத்தில 13 சடலங்களையும் நல்லடக்கம் செய்வதற்கு திட்டமிட்டு இக் கொலையைக் காரணம் காட்டி சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு அன்றைய ஜக்கிய தேசிய கட்சி அரசு சிங்கள மக்களுக்கான படுகொலை என சித்தரித்து காடையர்களை தூண்டி விட்டு இனப் படுகொலையை செய்து முடித்தது.
இவ் அழிவிலிருந்து ஸ்ரீலங்கா அரசு எச்சந்தர்ப்பத்திலும் தமிழர்களை பாதுகாக்க முயற்சிக்கவில்லை. 38 ஆண்டுகள் கடந்தும் கருப்பு யூலை தமிழின கொலை வெறி தமிழ் மக்கள் மத்தியிலிருந்து மறைக்கப்பட முடியாதவை.
இதன் தொடர்ச்சியாக இன்று வரை தமிழினத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல கருப்பு யூலைகள் நிகழ்ந்தேறி விட்டன.
இப்படிப்பட்ட தமிழினத்திற்கொதிரான இனவாத அரசின் செயற்பாடுகளை தடுத்த நிறுத்த தமிழர்களாகிய நாங்கள் ஓரணியில் திரள்வோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.