முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வுதிய விவகாரம்! எழுந்துள்ள புதிய சர்ச்சை
முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வுதியம் நிறுத்தப்படுவதாக இச்சட்டமூலத்தில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை என பேராசிரியர் சட்டத்தரணி பிரதீபா மஹனாமகே தெரிவித்துள்ளார்.
1986 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதவை மனைவிகளுக்கு வழங்கப்பட்டிருந்த கொடுப்பனவுகளே புதிய சட்டமூலத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் குறித்த கொடுப்பனவுகள் ஒருங்கிணைந்த நிதி கட்டமைக்கு பெரும் சுமையாக இருக்கும் என்பதால் அதை நிர்வகிப்பதற்காகவே இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
இதர கொடுப்பனவு
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் விதவை மனைவிகள் இருக்கும் வீடுகள் மற்றும் வாகனங்கள் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும் என விளக்கியுள்ளார்.
அத்தோடு பணியாளர்களுக்கான கொடுப்பனவுகள் இதர கொடுப்பனவுகளும் நிறுத்தப்படும் என கூறியுள்ளார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்தற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் பணிப்புக்கமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
இந்தச் சட்டமூலம் 2025 ஆம் ஆண்டு இலக்க ஜனாதிபதிகளின் உரித்து (இரத்துச் செய்தல்) சட்டம் என்று அடையாளப்படுத்தப்படும்.
