இறுதிநாள் பேரணியில் கலந்து கொள்பவர்களுக்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பேருந்துகள் ஏற்பாடு!
யாழ்ப்பாண மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு சுதந்திர தினமான 4 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வடக்கிலிருந்து கிழக்கு நோக்கியதான மக்கள் பேரணி இறுதி நாளான நாளைய தினம் மட்டக்களப்பில் நிறைவடையவுள்ளது.
இலங்கையின் சுதந்திர தினம் – தமிழர்களுக்கு கருப்பு தினம் எனும் தொனிப்பொருளில், தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணயம், தமிழ்த் தேசியம், மரபுவழித் தாயகம் ஆகிய விடயங்களை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில், இறுதி நாளான நாளைய தினம், மட்டக்களப்பில் நடைபெறவுள்ள குறித்த பேரணியில் கலந்து கொள்வதற்காக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பேருந்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
பேருந்து ஒழுங்குகள்
இன்றையதினம் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்தும், கிளிநொச்சி – பரந்தன் பேருந்து நிலையம் மற்றும் கிளிநொச்சி – புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் பேருந்து நிலையங்களில் இருந்தும் பேருந்துகள் செல்லவுள்ளன.
வட பகுதியில் இருந்து செல்வோர் அந்தந்த மாவட்டங்களில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள பேருந்து புறப்படும் இடங்களுக்கு குறித்த நேரத்துக்குச் சென்று தங்களது பயணத்தைத் தொடர முடியும் என கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலதிக தகவல் அல்லது உதவிகள் எதுவும் தேவைப்படின் 0774819490 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பினை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.