மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா - கோஷங்களுடன் வெற்றிகரமாக நகரும் மூன்றாம் நாள் பேரணி!
யாழ்ப்பாண மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு சுதந்திர தினமான 4 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வடக்கிலிருந்து கிழக்கு நோக்கியதான மக்கள் பேரணியானது, இன்றைய தினம் முல்லைத்தீவு மண்ணில் இருந்து புறப்பட்டு திருகோணமலையை சென்றடையவுள்ளது.
குறித்த மக்கள் எழுச்சிப்பேரணியானது, முல்லைத்தீவில் இருந்து திருகோணமலையை சென்றடையும் வழியில் உள்ள, இலங்கை இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது பெளத்த விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடங்களில் ஒன்றான நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் நிறுத்தப்பட்டு, அங்கே சிறிலங்கா அரசுக்கும், சிறிலங்கா இராணுவத்திற்கும் எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது.
புத்த விகாரைக்கு முன்னால் கோஷங்கள்
"மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, இராணுவமே வெளியேறு, எமது நிலம் எமக்கு வேண்டும், நீராவியடி எங்கள் சொத்து" என குருந்தூர் மலை மற்றும் செம்மலை நீராவியடியில் உள்ள இராணுவ ஆக்கிரமிப்புக்கள் மற்றும் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட புத்த விகாரைகளுக்கு முன்னால் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணயம், தமிழ்த் தேசியம், மரபுவழித் தாயகம் ஆகிய விடயங்களை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது இன்றைய தினம் வடக்கில் இருந்து கிழக்கை நோக்கி நகர்ந்து, இறுதி நாளான நாளை மட்டக்களப்பை சென்றடையவுள்ளது.