பேரணியைப் பின்தொடரும் புலனாய்வாளர்கள் - குழப்புவதற்கும் முயற்சி!
வடக்கு - கிழக்கு இணைந்த தமிழர் தாயக பகுதியில் தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளையும் கண்டித்து இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை தமிழர்களுக்கான கரிநாள் என வலியுறுத்தி யாழில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பேரணியானது, தற்போது முல்லைத்தீவில் இருந்து திருகோணமலையை நோக்கி செல்கிறது.
குறித்த வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி நகரும் மக்கள் பேரணியில் குழப்பத்தை ஏற்படுத்த இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் அரச புலனாய்வாளர்கள் முயற்சிப்பதாக கூறப்படுகின்றது.
பேரணி ஆரம்பித்த தினத்திலிருந்து இடையிடையே உள்நுழைகின்ற புலனாய்வாளர்கள் புகைப்படங்கள் எடுத்தும், பேரணியில் கலந்து கொண்டுள்ள மக்கள் மற்றும் மாணவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாக சொல்லப்படுகின்றது.
பேரணியைப் பின்தொடரும் புலனாய்வாளர்கள்
தற்போது முல்லைத்தீவில் இருந்து திருகோணமலையை நோக்கி செல்லும் பேரணியில் கலந்து கொண்டுள்ள வாகனங்களின் இலக்கங்களை பதிவு செய்வதும், புகைப்படம் எடுப்பதுமாக குறித்த புலனாய்வாளர்கள் பேரணியை பின்தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.