பூதாகரமாகும் ஹோர்முஸ் விவகாரம்! இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து
ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகள் காரணமாக உலகளாவிய ரீதியில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தலைமைப் பொருளாதார நிபுணர் மெக்சிமோ டொரெரோ எச்சரித்துள்ளார்.
தற்போது இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பயிர்ச் செய்கை காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், எரிபொருள் மற்றும் உரம் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அறுவடையைப் பெருமளவில் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 35 சதவீதமும், இயற்கை எரிவாயுவில் 20 சதவீதமும், உர விநியோகத்தில் 20 முதல் 30 சதவீதமும் இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது.
சுமூகமான உடன்பாடு
இந்த விநியோகத் தடைகள் தொடர்ந்தால் விவசாயிகள் குறைந்தளவிலான மூலப்பொருட்களை கொண்டே பயிர்ச் செய்கையில் ஈடுபட நேரிடும் என்றும், இது உணவு உற்பத்தியைக் குறைத்து தட்டுப்பாட்டை உருவாக்கும் என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

Image Credit: UNESCO
எதிர்வரும் 90 நாட்கள் மிகவும் முக்கியமானவை எனத் தெரிவித்துள்ள அவர், ஒருவேளை தற்போது சுமூகமான உடன்பாடு எட்டப்பட்டாலும் கூட, சந்தை இயல்பு நிலைக்குத் திரும்ப குறைந்தது மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, இக்காலப்பகுதியில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதே உலகளாவிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும் என்று டொரெரோ வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |