தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் - யாழ். பல்கலையில் இரத்ததான முகாம்
தமிழர் தாயகம் எங்கும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரமானது உணர்வு ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில்"உயிர் கொடுத்த உத்தமனுக்காய் உதிரம் கொடுப்போம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியத்தால் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரத்ததான முகாமானது செப்டெம்பர் 24 ஆம் திகதி மு.ப 9.00 மணி தொடக்கம் பி.ப 3.00 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. அனைத்து தரப்பினரையும் இந்த இரத்ததான முகாமில் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்திபவனி
இதேவேளை தியாக தீபம் திலீபனின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (23) யாழ் புங்குடுதீவு பகுதியில் தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தி பவனி ஆரம்பமாகி நடைபெற்றது.
தியாகி தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ் ஊர்தி பவனியானது புங்குடுதீவு பகுதியின் மக்கள் அஞ்சலிக்காக முக்கியமான இடங்களில் தரித்து நின்று அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்டது.
இந்த ஊர்தி பவனிக்கு யாழ் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளர்கள் வேலனை பிரதேச சபை உறுப்பினர்கள் புங்குடுதீவு பிரதேச பாடசாலை மாணவர்கள் மக்கள் ஆகியோர் உணர்வு ரீதியாக அஞ்சலி செலுத்தினர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
