நீர்த்தேக்கத்தில் மூழ்கி காணாமல்போன மாணவன் சடலமாக மீட்பு
ஹட்டன் நகருக்கு நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் மூழ்கி காணாமல்போன 17 வயது பாடசாலை மாணவனின் சடலம் தற்போது மீட்க்கபட்டுள்ளது.
குறித்த மாணவன் நேற்று தனது நண்பர்களுடன் சிங்கமலை நீர்த்தேக்கத்திற்கு சென்றிருந்த நிலையில், அங்கு மூழ்கி காணமல் போனதாக பொலிஸில் முறைபாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த பகுதியில் தேடுதலை மேற்கொண்ட பாதுகாப்பு தரப்பினர் மாணவனின் சடலத்தை இன்று மீட்டுள்ளனர்.
பின்னணி
இந்நிலையில் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள முக்கிய பாடசாலையில் கல்வி கற்கும் தமிழ்மாறன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை முடித்துவிட்டு, தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் ஆறு பாடசாலை மாணவர்கள், கணினி வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி, ஹட்டனில் உள்ள சிங்கமலை நீர்த்தேக்கத்திற்கு புகைப்படம் எடுக்க சென்றுள்ளனர்.
அவர்களில் ஒருவர் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (2025.07.08) மாலை 5.00 மணியளவில் தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்த பிறகு, நீர்த்தேக்கத்தின் ஓரத்தில் உள்ள பாறையில் ஏறி விழுந்து காணாமல் போயுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்த 6 மாணவர்களும் ஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் என்றும், தமிழ்மாறன் என்ற குறித்த மாணவர் அட்டை கடிக்குள்ளானதால் காலில் காயம் ஏற்பட்டதாகவும், இரத்தத்தை கழுவ நீர்த்தேக்கத்தில் இருந்த பாறையில் ஏறி இரத்தத்தை கழுவி கொண்டிருந்த வேலையில் அம் மாணவன் நீர்தேக்கதில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, ஹட்டன் நகருக்கு முக்கியமாக நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்திற்கான நீர் விநியோகம் முற்றிலுமாக மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சம்பவம் குறித்து அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
