ஏறாவூரில் கடத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் ! தலைமைறைவான சந்தேகநபர்கள்
ஏறாவூரில் வீதியால் தனியாகச் சென்ற 16 வயது சிறுவன் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான காணொளி காட்சியைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் 16 வயதுடைய மற்றொரு சிறுவன் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, ஏறாவூர் காவல் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி தளவாய் பகுதியில் 15, 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களைக் கொண்ட மூன்று வாள்வெட்டு குழுக்கள் இயங்கி வருவதாகத் தெரியவந்துள்ளது.
இக்குழுக்களை அப்பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவர் வழிநடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
குழுக்களுக்கிடையேயான மோதல்
மேலும், இக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிள்களில் வாள் மற்றும் கோடாரி போன்ற ஆயுதங்களுடன் நடமாடி வருவதாகவும், குழுக்களுக்கிடையேயான மோதல்கள் காரணமாக அண்மையில் முஸ்லிம் நோன்புப் பெருநாள் காலத்தில் இரவு நேரத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியிலிருந்து வீடு திரும்பியவர்களை இலக்கு வைத்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பழிவாங்கும் நடவடிக்கையாக ஒரு குழுவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் வீதியால் தனியாகச் சென்றபோது, எதிர் குழுவைச் சேர்ந்தவர்கள் அவரை கடத்திச் சென்று ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் மரத்தில் தலைகீழாக கட்டி வைத்து தாக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட கணொளி காட்சிகள் அண்மையில் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் நேற்று ஏறாவூர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
காணொளி ஆதாரங்கள்
அதனையடுத்து, காணொளி ஆதாரங்களின் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய 16 வயதுடைய சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் மூவர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |