முல்லைத்தீவில் பறிபோன இளைஞனின் உயிர் - தவறான மருந்து கொடுத்தாக சர்ச்சை
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற குறித்த இளைஞர், வீடு திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. உயிரிழந்த இளைஞரின் உடலம் தொடர்பான பிரேத பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை
வைத்தியசாலை ஊழியர்களின் அலட்சியம் மற்றும் மருந்துச் சீட்டைச் சரியாக வாசித்துச் செயற்படாததே இத்தவறுக்குக் காரணம் என உயிரிழந்தவரின் உறவினர்களும் பொதுமக்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துக்களின்படி, இளைஞரின் சிகிச்சையில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படவில்லை எனவும் அவரது உடல்நிலைக்கு ஏற்பவே மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மருத்துவமனையிலிருந்து வெளியேறும் போது இளைஞருக்கு வழங்கப்பட்ட மருத்துவ அட்டை மற்றொருவருடையது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனை ஊழியர்களால் மருத்துவ அட்டை தவறுதலாக மாற்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறியுள்ளார்.
இளைஞரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் வகையில் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |