கனடாவில் அமையவுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி! (காணொளி)
ஈழத்தமிழருக்கான நினைவுத் தூபி
முள்ளிவாய்க்காலில் நிர்மூலமாக்கப்பட்டு, அழித்துச் சிதைக்கப்பட்ட ஈழத்தமிழருக்கான நினைவுத் தூபியின் மாதிரிவடிவத்தை பிறம்ரன் பெருநகர் இன்று உத்தியோக பூர்வமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே தமிழ் இனப்படுகொலைக்கான நினைவாலயத்தை கனடா பிரம்ரன் மாநகரசபை உருவாக்க முன் வந்துள்ளது.
கனடாவின் புகழ் பூத்த பூங்காவான செங்கூசி பூங்காவில் பிராம்ரன் நகரசபை இந்த நினைவாலயம் கட்டுவதற்கான நிலத்தை ஒதுக்கி தமிழ் மக்களுக்கு தந்துள்ளது.
தமிழ் இனத்திற்கான அங்கீகாரம்
இருபதாம் நூற்றாண்டில் நடந்து முடிந்த மிகப் பெரிய இனவழிப்பாக ஈழத்தமிழருக்கு நடந்தேறிய இனப்படுகொலை இருந்த போதிலும், அதனை இனவழிப்பு என்று ஐ. நா சபையும், மேற்குலக சமூகங்களும் இற்றைவரை இனப்படுகொலை என்று பேச மறுக்கின்றன.
இந்நிலையில் பிராம்ரன் மாநகரசபையின் தமிழ் இனத்திற்கான இந்த அங்கீகாரம் ஓர் வரப்பிரசாதம் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
பாராமுகமாக தமிழ் மக்களின் பேரழிவு
உலகில் இனவழிப்பில் சிக்குண்டவர்களென யூத,ருவாண்டா மற்றும் ஆர்மீனிய மக்களை அடையாளப்படுத்தி அவர்களுக்கு அங்கிகாரம் கொடுப்பவர்கள், எம் ஈழத் தமிழ் மக்களின் பேரழிவைப்பற்றி பாராமுகமாக இருக்கிறனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மகத்தான பெருவிழாவின் வரவேற்புச் சிறப்புரையை தமிழ் இனப்படுகொலை தூபி அமைக்கும் குழுவின் உப தலைவரும், கனடா ஒட்டாவா கால்ரன் பல்கலைக்கழகப் பொறியியல் துறை பேராசிரியர் சிவதயாளன் தொடக்கி வைத்து உரையாற்றினார்.
இந்த நினைவுச் சின்ன திட்ட வடிவமைப்பை மேயர் பற்றிக் பிறவுண் மற்றும் பிராம்ரன் நகரசபையின் பிராந்திய உறுப்பினர்களான மார்டின், பாற் வொற்னி, ஜெவ் போமன், கிரகம் மெக்ரிகோர் ஆகியோர் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றினார்கள்.
கார்திகை பூ வடிவமைப்பை கொண்ட நினைவாலயம்
இந்த நினைவாலய வடிவமைப்பு உலகின் பல நூற்றுக் கணக்கான மாதிரிவடிவங்களில் இருந்து போட்டியடிப்படையில் தகுதியானதை தேர்வானதாக்கிய வடிவாகும்.
இந்த நினைவாலயம் 12 அடி அகலமும், 18 அடி உயரமும் கொண்டதாக அமைய உள்ளது.
உண்மையில் இதுதமிழரின் 12 உயிர்எழுத்துகளையும், 18 மெய்எழுத்துகளையும் உணர்த்தி நிற்கிற அழகிய தமிழின் அற்புதம்.
கார்திகை பூ வடிவமைப்பை மையமாக கொண்டு காலநிலை, மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு காரணங்களை கருத்திற் கொண்டு இதனை சிறப்பு கட்டிட நிபுணர் Ms. Bernia Ramic (from Bosnia) நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்.
தமிழர்களின் கடமை
தமிழர் தம் தேசத்தில் சிங்கள இனவெறியரசு நடத்திய நினைத்துப் பார்க்க முடியாத உயிர் இழப்புகளை கூட்டாக நினைவு கூர்வது புலம் பெயர் தமிழர்களின் கடமையாகும்.
உலகளாவிய தமிழ் மக்களின் பங்களிப்புடன் கட்டியெழப்பப்படும்.
இவ் தமிழ் இன அழிப்பு நினைவுத் தூபிக்கு உங்களனைவரின் நிதியுதவியினை தாராள மனதுடன் அளித்து பங்காளராவதற்கு https://tamilgenocidememorial.org/donation/ என்னும் பக்கம் பிரவேசிக்கவும்.