மன்னார் பொது வைத்தியசாலை முன்பாக வாகன நிறுத்தத்துக்கு தடை!
மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக முறையற்ற வாகன நிறுத்தத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக நீண்டகாலமாக வாகனம் நிறுத்தத் தடை (No Parking) என அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் வாகனங்கள் முறையற்ற விதத்தில் நிறுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில், அதற்கு எதிராக போக்குவரத்து காவல்துறையினர் நேற்று (13-08-2026) விசேட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடு
வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள், பொதுமக்கள் மற்றும் ஏனைய வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, முறையற்ற விதத்தில் வாகனங்களை நிறுத்திய வாகன உரிமையாளர்களுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், குறித்த பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை வளாகத்திற்கு முன்பாக போக்குவரத்து ஒழுங்கை பேணுவதற்கும் நோயாளர்களின் அவசரப் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த பகுதியில் வாகனங்களை நிறுத்தாமல், போக்குவரத்து காவல்துறையினரின் அறிவுறுத்தல்களையும் வீதிப் போக்குவரத்து விதிகளையும் பொதுமக்கள் கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



