யுத்தக் குற்றவாளியை தடைசெய்ய பிரித்தானிய எம்.பி ஆதரவு! முதன்முறையாக ஈழத் தமிழர்களை சந்திப்பதாக ஆதங்கம்
சிறிலங்கா இராணுவ பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்த குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடைசெய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, பிரித்தானியாவின் சால்போர்ட் மற்றும் எக்கிள்ஸ் (Salford and Eccles) நாடாளுமன்ற உறுப்பினரும், கல்வித் துறைக்கான நிழல் அமைச்சருமான (Hon. Rebbca Long Bailey M.P) அவர்களுடன் உயர்மட்ட சந்திப்பு ஒன்று நேற்று (11) மதியம் 12.00 மணியளவில் மெய்நிகர் வழியாக இடம்பெற்றுள்ளது.
சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில், தொழில்கட்சிக்கான தமிழர்கள்(Tamils For Labour) அமைப்பின் தலைவர் சென் கந்தையா, The Sri Lanka Campaign for Peace and Justice (SLC) அமைப்பின் பிரசாரப் பணிப்பாளர் பென்ஜமின் குமார் மொறிஸ் (Benjamin Kumar Morris) மற்றும் இவோன் ஸ்கோபீல்ட் (Yvonne Schofield), இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச சட்ட மையம் (ICPPG) அமைப்பின் பிரதிநிதி நிலக்ஐன் சிவலிங்கம், சித்திரவதையில் நேரடியாக பாதிக்கப்பட்டவரான அனுஷன் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கலந்து கொண்ட நேரடிசாட்சிகள்

கீத் குலசேகரம் தனது உரையின் போது, சிறிலங்காவின் ஆரம்பகால வரலாறு பற்றி எடுத்துரைத்தார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரம் அப்பாவி தமிழ்மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான சவேந்திர சில்வாவினை தடைசெய்ய போதுமான ஆதாரங்களை ஏற்கனவே ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புக்கள் சமர்ப்பித்திருந்த போதும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு(FCDO) இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதனை சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது சிறிலங்காவில் தொடரும் ஆட்கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுதப் படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும், சந்திப்பில் கலந்துகொண்ட சித்திரவதைக்குள்ளானவர்கள் இதற்கு நேரடிசாட்சி என்றும் தெரிவித்தார்.
மேலும் தங்கள் தொகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் சவேந்திர சில்வாவினை தடைசெய்யக்கோரி FCDO விற்கு அழுத்தம் கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
யுத்தக் குற்றங்களுக்கான ஆதாரங்கள்

SLC அமைப்பின் சார்பில் இவோன் ஸ்கோபீல்ட் (Yvonne Schofield) உரையாற்றும் போது சிறிலங்காவில் இடம்பெற்ற மனித புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைகளிற்கு சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த குற்றங்களிற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை தடைசெய்ய வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய சென்கந்தையா, சவேந்திர சில்வா யுத்தகுற்றங்களில் ஈடுபட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்படப்பட்டிருப்பதையும், அவர் மீது ஏற்கனவே அமெரிக்கா, கனடா பயணத்தடை விதித்துள்ளதையும் எடுத்துக்காட்டிய அவர், அமெரிக்கா, கனடாவின் வழியை பின்பற்றி பிரித்தானியாவும் தடை விதிக்கவேண்டும் என்று கோரி பிரித்தானிய புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதையும் விவரித்தார்.
நன்றி தெரிவித்தார்

சிறிலங்கா சவேந்திர சில்வாவினை தடைசெய்வதற்கு இதுவரை 50இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பிய கோரிக்கைகளுக்கு சரியான பதிலை FCDO தராதது வருத்தத்தை தருவதுடன், கடந்த 2010ஆம் ஆண்டிற்கு பிறகு வந்த எந்தவொரு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரும் தமிழர்களுடன் சந்திப்பு மேற்கொள்ளவில்லை எனவும் அத்துடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகத்துடன் தமிழர்களிற்கு சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்தி தருமாறும் கேட்டுக்கொண்டார்.
அனைவரின் கருத்துக்களையும் மிகவும் ஆர்வத்துடன் உள்வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர், இதுவே ஈழத்தமிழர்கள் தன்னை முதல் முறையாக சந்திப்பதாக தெரிவித்ததுடன், சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலை பற்றி தனக்கு முதல் முறையாக எடுத்து விளக்கியமைக்காக நன்றியும் தெரிவித்தார்.
அத்துடன் மிகவும் ஆர்வத்துடன் மேலதிக தகவல்களை கேட்டு அறிந்துகொண்டார்.
அனுசன் பாலசுப்பிரமணியம் உட்பட்டவர்களின் அனுபவங்களை கேட்டறிந்து கொண்டதுடன், தனது தொகுதியில் ஏராளமான தமிழ் மக்கள் வாழ்ந்து வரும்போதிலும் இன்றுவரை அவர்கள் தன்னை சந்திக்கவில்லை எனவும் வருத்தம் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு தனது முழுமையான ஆதரவு எப்போதும் இருக்கும் என்று உத்தரவாதம் அளித்தார்.
ஆதரவு வழங்க உத்தரவாதம்

அத்துடன் கீத் குலசேகரம் அவர்களால் முன்வைக்கப்பட்ட நான்கு கோரிக்கைகளுக்கும் தனது முழுமையான ஆதரவை வழங்க உத்தரவாதம் அளித்தார்.
அதன் அடிப்படையில் FCDOவிற்கு தங்கள் தொகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் சவேந்திர சில்வாவினை தடைசெய்யக் கோரி அழுத்தம் கொடுப்பதாகவும், பிரித்தானிய தமிழர்களிற்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்குழு (APPGT) மற்றும் மக்நிட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவிலும் (APPG for Magnitsky Sanctions) இணைவதாகவும் வாக்களித்தார்.
அத்துடன் யுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவை தடைசெய்யக் கோரி பகிரங்க அறைகூவல் விடுக்கும் காணொளி வெளியிடவும் சம்மதித்தார்.
மான்செஸ்டர் (Manchester) பகுதியில் பல தமிழர்கள் வாழ்ந்துவரும் நிலையிலும், பல தமிழ் அமைப்புகள் இயங்கிவரும் நிலையிலும் இன்றுவரை இவர் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை இதுவரை சந்தித்து சிறிலங்கா இனப்படுகொலை பற்றி எடுத்துரைக்காமல் இருப்பது மிகவும் வருத்தத்துக்கு உரிய விடயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.