“நீதிமன்றத்தில் சந்திப்போம்” சரத் வீரசேகரவுக்கு சி.வி. விக்னேஸ்வரன் கொடுத்துள்ள பதில்
அமைச்சர் சரத் வீரசேகர என் மீது சட்ட நடவடிக்கை கட்டாயமாக எடுக்கட்டும். அதை நீதிமன்றத்திலே சந்திப்போம் என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அண்மையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்... அவர் சட்ட நடவடிக்கை எடுத்தால் நான் அதை வரவேற்கின்றேன்.
காரணம் எங்களுடைய பிரச்சினைகளை நாங்கள் வெளியில் கொண்டுவரக்கூடிய ஒரு சந்தர்ப்பம் எங்களுக்கு ஏற்படும்.
ஏன் என்றால் நான் இதுவரையில் எடுத்திருக்கும் அத்தனை நடவடிக்கைகளும் ஜனநாயகத்திற்கு உட்பட்ட நடவடிக்கைகளே.
வெறுமனே தாங்கள் நினைத்தது போன்று எங்களை குற்றம் சாட்ட முடியாது. சட்ட நடவடிக்கை கட்டாயமாக எடுக்கட்டும் நீதிமன்றத்திலே அவற்றை சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.