சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிப்பு: அமைச்சரவை மாற்றத்திற்கு இதுவே காரணம் - NPP தரப்பு விளக்கம்
கொள்கலன் விடுவிப்பு சம்பவத்துக்கும் அமைச்சரவை மாற்றத்துக்குமிடையில் எவ்வித தொடர்பும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayathissa) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் கீழ் பரந்துபட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவுமே இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சரவை பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று (14) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொள்கலன் விடுவிப்பு சம்பவம்
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ‘‘கொள்கலன் விடுவிப்பு சம்பவத்துக்கும் அமைச்சரவை மாற்றத்துக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை.
323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேவையானளவு கலந்துரையாடியுள்ளோம். அந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதியும் குழுவொன்று நியமித்திருக்கிறார்.
இவ்வாறு பரிசோதனை செய்யும் கொள்கலன்கள் மற்றும் கொள்கலன் நெருக்கடியை தவிர்த்துக்கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளினூடாக பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளன என்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அதற்காகவே குழு நியமிக்கப்பட்டு அதுதொடர்பான அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணையும் இடம்பெற்று வருகிறது.
நிதி செலவு தொடர்பில் பிரச்சினைகள்
மார்ச், ஏப்ரல், டிசம்பர் போன்ற காலப்பகுதிகளில் கொள்கலன் நெருக்கடியை தவிர்த்துக்கொள்வதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளினூடாக இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றனவா என்பதை தேடிப்பார்க்க வேண்டியுள்ளது.
இதற்கு முன்னரும் 14 சந்தர்ப்பங்களில் இவ்வாறு கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஆட்சியை பொறுப்பேற்று எங்களின் வரவு செலவுத் திட்டத்தில் நாங்கள் ஆட்சி செய்யவில்லை.
மார்ச் மாதம் 27ஆம் திகதியே எங்களின வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டோம். அதன் பின்னர் மே மாதம் 06ஆம் திகதி வரை உள்ளூராட்சித் தேர்தலினால் நிதி செலவு தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் தோற்றம் பெற்றன.
குறிப்பாக கூறுவதானால், எங்களால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்துக்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னரே எங்களின் வேலைத்திட்டங்களுக்கு அமைய செயற்பட ஆரம்பித்துள்ளோம். அமைச்சுகளின் செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளோம்.
அமைச்சுகளின் விடயப்பரப்பு
அதற்கான நடவடிக்கைகளுக்காகவே வரவுசெலவுத் திட்டத்துக்கு முன்னர் அமைச்சரவைத் திருத்தத்தை மேற்கொண்டு, பரந்துபட்ட விடயப்பரப்புகள் இருந்த அமைச்சுகளின் விடயப்பரப்பு குறைக்கப்பட்டு, பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியிடமிருந்த அமைச்சுக்கும் பிரதி அமைச்சரொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊடத்துறைக்கு தனியான பிரதி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சமய அலுவல்கள் கலாசார பிரதி அமைச்சராக முனீர் முளப்பர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
