காடையர்களின் தாக்குதலால் அனைத்து சிங்கள மக்களையும் நோகலாமா...
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் ஊர்திமீது நடாத்தப்பட்ட தாக்குதல் எதன் வெளிப்பாடாக இருக்கிறது? இதற்காக அனைத்து சிங்கள மக்களையும் நோகலாமா என்கிற கேள்வி நம் முன்னால் எழுகிறது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அகிம்சை முகமாகக் கருதப்படுகின்ற தியாக தீபம் திலீபன் அவர்கள், ஈழத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்காக உண்ணா விரதம் என்ற அறவழியில் பன்னிரு நாட்கள் உக்கிரப் போராட்டம் நடாத்தி தன்னுயிரை ஈகம் செய்தார்.
தீர்க்கமான பார்வையும் உறுதியான கொள்கைப் பற்றும் கொண்ட தியாக தீபம் திலீபன் அவர்கள் சிங்கள மக்களும் விரும்பும் ஒரு போராளியாக இருந்தார் என்பதும் இங்கு முக்கியத்துவப்படுத்தி சொல்ல வேண்டியதாகும்.
அகிம்சைக்கு வன்முறையால் பதில்
இந்த நிலையில் இந்த ஆண்டு தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு - தமிழர் தாயகத்தை வலம் வரும் பொருட்டு, பொத்துவில் தொடங்கி நல்லூர் வரையில் திலீபன் நினைவேந்தல் ஊர்தி ஒன்றை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.

கடந்த ஆண்டும் இதேபோல தியாக தீபத்தின் அறவழிப் போராட்டத்தை எடுத்தியம்பும் வகையில் நினைவேந்தல் ஊர்தி வடக்கு கிழக்கை வலம் வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அப்போது சிங்கள மக்களும் முஸ்லீம் மக்களும் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வுகள் இடம்பெற்றமை ஊடகங்களில் பதிவாகின.
இந்த நிலையில் இம்முறை நினைவேந்தல் ஊர்தி கிழக்கில் இருந்து வடக்கு நோக்கி வருகின்ற வேளையில், அதாவது தமிழர்களின் தலைநகரான திருகோணமலை மண்ணில் வைத்து சிங்கள காடையர்கள் சிலரால் தாக்கப்பட்ட சம்பவம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
தனது அகிம்சை வழிமுறைகளால் ஈழத் தமிழ் மக்களை மாத்திரமின்றி சிங்கள மக்களையும் ஈர்த்த ஒரு போராளியின் அகிம்சைப் பயணத்தின் போது வன்முறை பிரயோகிக்கப்பட்டமை பேரினவாத சிந்தனையின் கொடூரத்தைக் காட்டி நிற்கிறது. அத்துடன் பல்வேறு அரசியல் புரிதல்களை இந்த நிகழ்வு ஏற்படுத்தவும் ஆனது.
ஒட்டுமொத்த சிங்களவர்களையும் நோகலாமா?
தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப் படத்தை தாக்கி கிழிக்கும் காட்சிகளும் நினைவேந்தர் ஊர்திமீது வெறி கொண்டு தாக்கும் காட்சிகளும் குறித்த ஊர்தியில் பயணித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்மீது தாக்குதல் நடாத்தப்படுகின்ற காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

உண்மையில் மனிதப் பிறவி எடுத்த எவரும் வெட்கப்படும் வகையில் அமைந்த இந்த தாக்குதல் இலங்கைத் தீவில் கொடூரமாக வேரூன்றிவிட்ட பேரினவாத வெறியின் வெளிப்பாடாகும். அத்துடன் ஸ்ரீலங்கா அரசின் ஜனநாயக முகமூடிமீது கரியை பூசுகின்ற நிகழ்வுமாகும்.
இந்த தாக்குதல் இடம்பெற்ற பின்னர், தாக்குதலில் ஈடுட்டவர்கள் சிங்கக் கொடியை ஏந்தி இருக்கும் படத்தையும், கிரிக்கட் போட்டியில் சிங்க இலட்சினையுடன் தோல்வியை தழுவிய படமும் ஒரே சேர முகநூலில் பகிரப்பட்டிருந்தது.
சிங்கக் கொடியுடன் ஒரு அநீதியை நிகழ்த்தும் போது இன்னொரு புறத்தில் சிங்கக்கொடி மண்ணை கவ்வுகிறது என்று சமூக வலைத்தளவாசிகள் குறிப்பிட்டிருந்தனர். அதனை எனது முகநூலில் பகிர்ந்த வேளையில் சில சிங்கள நண்பர்கள், அதனை பகிர்வது தவறான கருத்துக்களை உருவாக்கும் என்றும் அழகல்ல என்றும் கருத்துக் கூறினர். திலீபன் நினைவேந்தல் ஊர்திமீது நடாத்தப்பட்ட தாக்குதலால் ஈழத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட வேதனை இத்தகைய பதிவுகளை பகிரச் செய்கிறது.
அதேவேளை சிங்களக் காடையர்கள் சிலர் நடாத்திய தாக்குதலால் ஒட்டுமொத்த சிங்கள மக்கள்மீதும் கோபப்படாதீர்கள் என்று கூறுகின்ற சிங்கள நண்பர்களின் கருத்துக்களுக்கும் நாம் செவிசாய்க்க வேண்டும். இங்குதான் பேரினவாத அரசும், பேரினவாதிகளும் ஒரு அரசியலை செய்ய முற்படுகிறார்கள்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் சார்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்தும் சிங்கள மக்கள் அறிந்துகொள்ளக்கூடாது ஈர்ப்புக்கொள்ளக் கூடாது என்று சிங்களப் பேரினவாதிகள் காலம் காலமாக காய்களை நகர்த்தி வருகிறார்கள்.
நினைவேந்தல் ஒரு ஆயுதம்
கடந்த ஆண்டு தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் பெருமெடுப்பில் தமிழர் தாயகத்தில் இடம்பெற்றது. அத்துடன் இதேபோன்று திலீபன் நினைவேந்தல் ஊர்தியும் வடக்கு கிழக்கை வலம் வந்தது.

அப்போது பேரினவாதியும் இனப்படுகொலைக் குற்றவாளியுமான சரத் வீரசேகர என்ற பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் எனப்படுவர், அன்றைக்கு திலீபன் போன்ற பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்ற விசக் கருத்தை கக்கினார். இதனால் அப்போது திலீபன் குறித்த விடயமும் அவரது நினைவேந்தலும் பேசுபொருள் ஆகியது.
உண்மையில் சிங்கள மக்கள் திலீபன் குறித்து பேசுவதும் ஆர்வம் கொள்வதும் அவரது போராட்ட வழிமுறை குறித்து பிரமிப்பும் உன்னத உணர்வும் கொள்வதும் சிங்களப் பேரினவாதிகளுக்கு சிக்கலாக இருக்கிறது.
உண்மையில் இத்தகைய நினைவேந்தல்களை உரு ஆயுதமாக பிரயோகிக்க வேண்டும் என்பதைதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், எம்மினத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் வழிப்படுத்தச் சென்றார்.
இன்று அரங்கில் புலிகள் இயக்கம் இல்லாத போதும் அவர்களின் நினைவேந்தல் சிங்கள மக்களுக்கு ஈழத் தமிழர்களின் நியாயங்களை சொல்ல முனைகிறது. அதுவே சிங்களப் பேரினவாதிகளுக்கு பெரும் காய்ச்சலையும் மனவுளைச்சலையும் ஏற்படுத்துகிறது.
விமல் வீரவன்சவின் போலி உண்ணாவிரதம்
இதனால்தான் அன்றைக்கு சரத் வீரசேகர போன்றவர்கள் திலீபன் நினைவேந்தலுக்கு எதிராக கூச்சல் இட்டார்கள். இம்முறை அத்தகைய ஒரு பின்னணியில்தான் திருகோணமலையில் நினைவேந்தல் ஊர்த்திமீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

மிகத் திட்டமிட்டு பேரினவாத சிந்தனையுடன் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அத்துடன் இதன் பின்னணியில் அரசும் இருக்கும் என்றே சந்தேகிக்கத் தோன்றுகிறது. ஏனெனில் அரச தரப்பினர் வருகை தரக்கூடிய இடங்களில் காடையர்களின் அத்துமீறல்கள் மிகக் சுதந்திரமாக இடம்பெறுவதையும் நாம் கடந்த காலத்தில் பார்த்தும் இருக்கிறோம்.
எனவே திருகோணமலையில் நினைவேந்தல் ஊர்மீது நடாத்தப்பட்ட தாக்குதல் திட்டமிட்ட தாக்குதல். 2010இற்குப் பிந்தைய அரசியல் சூழலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பன்னாட்டு சமூகத்திற்கு எதிராக அன்றைய அமைச்சர் விமல் வீரவன்ச, சாகும் வரையில் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
சில நாட்கள் உண்ணா விரதம் இருந்தார். அவரது உண்ணா விரத்தின்மீது அது உண்ணாவிரதமா என ஊடகங்கள் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தின. சில நாட்கள் கழித்து மகிந்த ராஜபக்சவினால் பழரசம் பருக்கப்பட்டு விமல் வீரவன்ச தனது தேசபக்தி உண்ணா விரதத்தை முடித்துக்கொண்டார். அது சிங்கள ஊடகங்களில் பெரும் பேசுபொருள் ஆனது. பேசுபொருள் ஆனது என்பதைவிட கேலிப்பொருள் ஆனது எனலாம்.
சிங்களவரை கவர்ந்த திலீபன்
அப்போது சிங்கள எழுத்தாளர்கள் சிலர் இலங்கையில் உண்மையிலே நடந்த உண்ணா விரதப் போராட்டம் பற்றி எழுதினர். அது தியாக தீபம் திலீபன் அவர்கள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் என்றனர்.

விமல் வீரவன்ச போன்றவர்கள் போலி உண்ணா விரதப் போராட்டத்தை முன்னெடுத்தாகவும் புலிப் போராளி திலீபன்தான் உண்மையான அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்ததாகவும் சிங்கள எழுத்தாளர்கள் எழுதியிருந்தார்கள்.
இதனால் திலீபன் குறித்த அவதானம் சிங்களர்கள் மத்தியில் ஏற்பட்டது. அத்துடன் திலீபன் குறித்த பாடல்களும் கவிதைகளும்கூட அப்போதும் அதற்கு முன்னரும் சிங்களத்தில் எழுதப்பட்டமையும் இங்கே குறிப்பிடவேண்டியது.
இந்த நிலையில்தான் சிங்களப் பேரினவாதிகள் திலீபன் குறித்தும் ஈழப் போராளிகள் குறித்தும் அச்சம் கொள்கின்றனர். போலியான தமது தேசப்பற்று முகத்தின் திரை கிழிந்துவிடும் என்று அஞ்சுகின்றனர்.
இந்த நேரத்தில் அனைத்து சிங்கள மக்களையும் நாம் வெறுக்க முடியாது. இப்போதும் திருமலை நினைவேந்தல் ஊர்த்தி தாக்குதலுக்குப் பிறகு திலீபன் குறித்த அவதானம் சிங்களர்கள் மத்தியில் சிங்கள ஊடகங்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அதனை இல்லாமல் செய்ய சிங்கள காடையர்களைக் கொண்டு பேரினவாத தலைவர்கள் திட்டும் திட்டத்திற்கு நாம் பலியாகக்கூடாது. அதனால் சிங்கள காடையர்கள் நடாத்திய தாக்குதலுக்காக அனைத்து சிங்கள மக்களையும் நோவது தவறானதாகும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 25 September, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.