கனடா தேர்தலில் காலிஸ்தான் தலைவர் படுதோல்வி - வெளியிட்ட அறிவிப்பு
புதிய இணைப்பு
கனடா (Canada) நாடாளுமன்றத் தேர்தலில் காலிஸ்தான் ஆதரவாளரும் என்.டி.பி., கட்சித் தலைவருமான ஜக்மீத் சிங் படுதோல்வி அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட என்.டி.பி எனப்படும் புதிய ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.
அக்கட்சியின் தலைவரும், காலிஸ்தான் ஆதரவாளராக அறியப்படுபவருமான ஜக்மீத் சிங் தோல்வி அடைந்துள்ளார். இதையடுத்து, கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து பதவி விலகல் செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
நாட்டை கட்டி எழுப்பினர்
ஜக்மீத் சிங் தனது சமூகவலைதள பதிவில் கருத்து தெரிவிக்கையில், புதிய ஜனநாயக கட்சியினர் இந்த நாட்டை கட்டி எழுப்பினர்.
நாங்கள் எங்கும் செல்ல போவதில்லை. தேர்தலில் அதிக இடங்களை வெல்ல முடியாதது எனக்கு ஏமாற்றமே.
கட்சிக்காக நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். பயத்தை விட நம்பிக்கையை நாங்கள் தேர்ந்தெடுப்போம். பிரதமர் கார்னி மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
கனடாவில் (Canada) புதிய பிரதமரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லிபரல் கட்சி மொத்தமாக 144 இடங்களை வென்றுள்ளதுடன் 21 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இதன் மூலம் தொடர்ந்து நான்காவது முறையாக லிபரல் கட்சி கனடாவில் ஆட்சியமைக்க உள்ளது.
முதலாம் இணைப்பு
கனடாவில் (Canada) 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் இடம்பெற்ற நிலையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கைகளின் படி லிபரல் கட்சி (Liberal Party) முன்னிலையில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெரும்பான்மையை பெறுவதற்கு கட்சியொன்று 172 ஆசனங்களை கைப்பற்ற வேண்டும்.
தேர்தலின் தற்போதைய நிலவரப்படி, 52.1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் 372,092 வாக்குகளை பெற்று லிபரல் கட்சி முன்னிலையில் உள்ளது. அதேவேளை, கன்சர்வேடிவ் கட்சி 40.4 சதவீத வாக்கு வித்தியாசத்தில் 298,639 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
ட்ரூடோ பதவி விலகல்
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கடந்த ஜனவரி 6 ஆம் திகதி பதவி விலகுவதாக அறிவித்தார்.
உள்நாட்டு பிரச்சினை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதை தொடர்ந்து கனடா மீதான வரி உயர்வு ஆகியவற்றின் காரணமாக ட்ரூடோ பதவி விலகல் செய்தார்
அதனை தொடர்ந்து, லிபரல் கட்சிக்கு புதிய தலைவராக மார்க் கார்னி பொறுப்பேற்று பிரதமர் பதவியில் அமர்ந்தார்.
லிபரல் கட்சி முன்னிலை
லிபரல் கட்சியின் தற்போதைய தலைவரான பிரதமர் மார்க் கார்னி மாதம் தேர்தலை அறிவித்தார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போது, லிபரல் கட்சிக்கு 152 ஆசனங்களும், கன்சர்வேடிவ் கட்சிக்கு 120 ஆசனங்களும் இருந்தன.
கனடாவில் தேர்தல் நடைபெற்று வருகிறது, கனடாவில் வாக்களிக்க தகுதியுடைய 28 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர், அவர்கள் ரைடிங்ஸ் என்றும் அழைக்கப்படும் 343 தனிப்பட்ட தொகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
இந்நிலையில், தற்போது லிபரல் கட்சி முன்னிலையில் உள்ளதாக கனடா ஊடகம் தெரிவித்துள்ளது. லிபரல் கட்சி தொடர்ந்து நான்காவது தடவை ஆட்சியை கைப்பற்றும் அவர்களின் அரசாங்கம் பெரும்பான்மை அரசாங்கமா சிறுபான்மை அரசாங்கமா என தெரிவிக்க முடியாது என்றும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
