கனடா முழுவதும் ஒலித்த முள்ளிவாய்க்கால் நினைவின் குரல்: தமிழர்களுக்காக ஒன்று கூடிய அரசியல் தலைமைகள்
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கனடா முழுவதும் உள்ள அரசியல் தலைமைகள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை வழங்குமாறு அந்த அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனடிப்படையில், கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
கொடூரமான படுகொலை
குறித்த அறிக்கையில், “பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு முள்ளிவாய்க்காலில் நடந்த கொடூரமான படுகொலையுடன் சிறிலங்கா உள்நாட்டுப் போர் துயரத்துடனும் இரத்தக் கறையுடனும் முடிவுக்கு வந்தது.

தமிழ் இனப்படுகொலை நினைவு நாளில் நம் காலத்தின் இந்தப் பெருங்குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாம் துக்கப்படுகிறோம். உயிர் பிழைத்தவர்களைக் கௌரவிப்பதுடன் நீதிக்கான எங்கள் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
2013 இல் சிறிலங்காவில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டை அன்றைய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கொள்கை ரீதியாகப் புறக்கணித்ததை கன்சர்வேட்டிவ் கட்சியினர் இப்போதும் பெருமையுடன் நினைவு கூர்கிறோம்.
இனப்படுகொலை
ராஜபக்ச அரசாங்கம் தங்களின் குற்றங்களுக்காக நீதியை எதிர்கொள்ள வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
அத்துடன் இனப்படுகொலை செய்தவர்களுக்கு கனடா ஒரு புகலிடமாக இருக்க முடியாது.

இந்த ஆழமான துயர நாளில் நீதியான மற்றும் அமைதியான நாளைக்காக உங்களோடு நாங்களும் இணைகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
நினைவு கூர்தல்
இது குறித்துத் தெரிவித்துள்ள அவர், “இன்று, தமிழ் இனப்படுகொலைக்கு பலியானவர்களை நாங்கள் நினைவுகூருகிறோம். அவர்களின் நினைவைப் போற்றுகிறோம்.

கனடா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகங்களுடன் இணைந்து நினைவு கூர்தல், சிந்தித்தல் மற்றும் நீதி, அமைதி, மனித உரிமைகளுக்கான தொடர்ச்சியான தேடலில் நாங்கள் துணை நிற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கனடாவின் எரிசக்தி அமைச்சர் டிம் ஹாட்ஜ்சன் (Tim Hodgson), நாடாளுமன்ற உறுப்பினர்களான ராப் ஒலிஃபண்ட் (Rob Oliphant), மைக்கேல் கோட்டோ (Michael Coteau), ஹெடி ஃப்ரை (Hedy Fry), மேகி சி (Maggie Chi), அஸ்லம் ரானா (Aslam Rana) மற்றும் பிராம்ப்டன் நகர மேயர் பேட்ரிக் பிரவுன் (Patrick Brown), மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜய் தணிகாசலம் (Vijay Thanigasalam), மேரிட் ஸ்டைல்ஸ் (Marit Stiles), சில்வியா குவால்தியேரி (Silvia Gualtieri) உள்ளிட்ட பல மாகாண மற்றும் நகராட்சி மட்டத்திலான அரசியல் தலைவர்களும் தமிழ் இனப்படுகொலை நினைவு நாளை ஒட்டி தங்களது நினைவுச் செய்திகளைப் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








