யாழில் காவல்துறையினரை தாக்கிய நபர் ஒருவர் கைது
காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்து, காவல்துறை உத்தியோகஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
காவல்துறையினர் மீது தாக்குதல்
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்கு வருமாறு, குறித்த நபருக்கு காவல்துறையினர் அழைப்பு விடுத்த போதிலும், அவர் காவல் நிலையம் செல்லாததால், நேற்றைய தினம் வியாழக்கிழமை குறித்த நபரை கைது செய்வதற்கு, பருத்தித்துறை காவல்துறையினர், அச்சுவேலி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் நபரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அதன் போது அவர் காவல்துறையினருடன் முரண்பட்டு, காவல்துறையினரை தாக்கியும் உள்ளார்.
அதனை அடுத்து அச்சுவேலி காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , அச்சுவேலியில் இருந்து மேலதிக காவல்துறையினர் அங்கு விரைந்து, பருத்தித்துறை காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்டவரை கைது செய்து பருத்தித்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி மற்றும் பருத்தித்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.