கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வழக்கை பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (12) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கெஹெலிய ரம்புக்வெல்ல அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள் அமாலி நாயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அவர்களது பணியாளரான நிபுணி கிருஷ்ணஜினா ஆகியோருக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு ஒத்திவைப்பு
இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிபதி, வழக்கை மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

கெஹெலிய அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், தனது தனிப்பட்ட ஊழியர் குழாமில் வெளி நபர்களின் பெயர்களைச் சேர்த்து, அவர்களுக்குரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் தனது வங்கிக் கணக்குகளில் வரவு வைத்ததன் மூலம் 'ஊழல்' செய்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தது.
இந்தச் சந்தேக நபர்களுக்கு எதிராக ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |