வடக்கில் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்ட செஞ்சோலை படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் (காணொளி)
முல்லைத்தீவு செஞ்சோலை வளாகத்தில் தலைமைத்துவ பயிற்சியில் பங்கேற்றிருந்த மாணவர்கள் மீது சிறிலங்கா விமானப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலின் 17 ஆம் ஆண்டு நினைவுதினம் வடமாகாணத்தில் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு
விமான தாக்குதல் நடத்தப்பட்ட செஞ்சோலை வளாகத்தில் இன்று காலை நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தது.
சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையில் குறித்த பகுதியில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் உறவினர்கள் அரசியல் பிரமுகர்கள் குடிசார் சமூக செயற்ப்பாட்டாளர்கள் என பலர் இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
குறித்த பகுதியில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து இன்று காலை முல்லைத்தீவு வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் அமைக்கப்பட்ட பிரத்தியேக நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் தாய் தமிழ் பேரவையின் ஆதரவோடு சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
அஞ்சலி நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் , நலன்விரும்பிகள், செஞ்சோலையில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு தென்னங் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

வவுனியா
மேலும் செஞ்சோலை படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்றையதினம் வவுனியாவில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
வவுனியா ஏ9 வீதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் 2367வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் கொட்டகையினுள் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது எம்.கே. சிவாஜிலிங்கத்தால் உயிரிழந்த மாணவிகளுக்கு சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேவேளை, செஞ்சோலைப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்கள் இன்று(14) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் மேற்கொள்ளப்பட்ட இவ் நினைவேந்தலில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களின் திருவுருவப் படத்துக்கு ஈகைச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
விரிவுரையாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் எனப் பலரும் நினைவேந்தலில் கலந்துகொண்டனர்.



