தீர்வை எட்டாவிடில் கடலில் இரத்தக்களரி ஏற்படும்- இந்தியா-சிறிலங்கா அரசாங்கங்களுக்கு எச்சரிக்கை!
இந்திய அரசாங்கம் தமது நாட்டு படகுகளை எமது நாட்டுக்குள் அனுப்பி கொள்ளை அடிப்பதை நிறுத்த வேண்டும். இது ஒரு கேவலமான செயல். இந்திய அரசாங்கம் வல்லரசாக இருந்து கொண்டு ஒரு சிறிய நாட்டுக்குள் வந்து வளங்களை சுரண்ட முயற்சிப்பது மிக வேகமான செயல்.
எனவே இந்தியா இதில் கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் வி. சுப்ரமணியன் தெரிவித்தார்.
இன்று இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறல் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டம் நடவடிக்கைகள், கொள்கை போக்கு இல்லாத காரணத்தினால் பொருளாதார பின்னடைவு ஏற்படுவதுடன் விலைவாசியை உயர்த்தி கொண்டு நாடு பல கோணத்தில் திண்டாடிக் கொண்டிருக்கின்றது.
இந்த சமயத்திலேயே, தொடர்ச்சியாக இலங்கையில் உள்ள மீனவர்கள் அனைவரும் பலதரப்பட்ட வகையிலே பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து சவாலின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
நீண்டகாலமாகப் புரையோடிப் போயுள்ள அத்துமீறும் இந்திய மீன்பிடி படகுகளின் பிரச்சினைகளுக்கு இன்று வரை பல தரப்பட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தும் அதற்கு ஆக்கபூர்வமான முடிவோ தீர்வோ எட்டப்படவில்லை.
இந்த சூழலில் இலங்கை கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் தாக்கம் அதிகரித்து இருக்கின்றது. இந்த அரசாங்கம் வந்த பின்னர் அவர்கள் ஒரு துணிச்சலுடன் நமது கரையை அண்டிய பகுதிகளில் எமது வளங்களை அழிப்பது மட்டுமல்லாமல் தொழிலாளர்களின் தொழில் செய்யும் பொருட்களையும் நாசப்படுத்தி கொண்டிருக்கின்றார்கள்.
அதற்கப்பால் தமிழக மீனவர்களுக்கும் வடபகுதி மீனவர்களுக்கும் இடையில் முரண்பாடான சூழல் ஒன்று ஏற்பட்டு இருக்கின்றது. இது சம்பந்தமாக நாங்கள் இந்திய துணைத் தூதரிடம் சென்று முறைப்பாடுகளை தெரிவித்தோம். அவர்களும் இந்த சந்தர்ப்பத்திலே நடந்த நிகழ்வுக்கு மனவருத்தத்தை தெரிவித்திருக்கிறார்கள்.
இந்திய அரசு இழுவை மடி தொழிலை நிறுத்த காலவகாசம் கேட்டது. அதிலிருந்து யாரும் இதுவரை விடுபட்டதாக தெரியவில்லை. குறிப்பாக வடமராட்சி கிழக்கு பகுதிக்கு அண்மையாக கூப்பிடும் தொலைவில் வந்து இந்திய மீனவர்கள் இழுவை மடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். எமது மீன்பிடி அமைச்சர் இது சம்பந்தமாக ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மக்களை உசுப்பேத்தி விட்டு அமைச்சர் பேசாமல் இருக்கின்றார். அரசாங்கத்தை இதிலே அந்நியப்படுத்தி வைத்துக்கொண்டு தொழிலாளர்களுக்கு இடையிலேயே ஒரு முறுகல் நிலையை தொடர்ந்து வைத்திருப்பதற்கு அமைச்சர் முயற்சிக்கிறார். அமைச்சரின் கபட நாடகத்தை விடுத்து அரசாங்கம் உடனடியாக இழுவைமடிச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குள் அத்துமீறிச் செயற்படுபவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். அவர்களை எந்த நிபந்தனை அடிப்படையிலோ நல்லிணக்க அடிப்படையிலோ விடுவிக்கக் கூடாது. இந்திய அரசாங்கம் தமது நாட்டு படகுகளை எமது நாட்டுக்குள் அனுப்பி கொள்ளை அடிப்பதை நிறுத்த வேண்டும்.
இது ஒரு கேவலமான செயல். இந்திய அரசாங்கம் வல்லரசாக இருந்து கொண்டு ஒரு சிறிய நாட்டுக்குள் வந்து வளங்களை சுரண்ட முயற்சிப்பது மிக வேகமான செயல். எனவே இந்தியா இதில் கவனம் எடுத்து செயல்பட வேண்டும்.
இரண்டு அரசாங்கங்களும் பேசி இந்த விடயத்தில் உடனடியான தீர்வை எட்ட வேண்டும். இல்லாவிடில் கடலில் ரத்தக்களரி ஏற்படக்கூடிய ஒரு சூழல் ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக இரண்டு அரசாங்கங்களும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
யார் அழைப்பு விடுத்தாலும் மீனவர்கள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து இணையத் தயாராக இருக்கின்றோம். எனக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் உள்ளூரில் இழுவைமடிச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அத்துமீறும் வெளிநாட்டு மீன்பிடி படகுகளை கைது செய்யக்கோரியும் அந்த போராட்டம் நடைபெற உள்ளது.
நானும் அதில் பங்கேற்பேன்
இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முயற்சி எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.