சம்பிக்கவின் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம் : நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் வாகன விபத்தை ஏற்படுத்தி, சம்பவத்தின் பின்னர் ஆதாரங்களை மறைத்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவரது சாரதி மற்றும் அப்போதைய வெலிக்கடை காவல்துறை பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு இன்று (25) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பயணத் தடை
பிரதிவாதியான பாட்டலி சம்பிக்க ரணவக்க சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜெயமன்னே, அடுத்த நீதிமன்ற திகதி வரை தனது கட்சிக்காரருக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை தற்காலிகமாக நீக்க உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை தற்காலிகமாக தளர்த்த மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
