யாழ்ப்பாணத்து பேருந்து சேவையில் வருகிறது மாற்றம்
தனியார் பேருந்துகளின் உள்ளூர், வெளியூர் மற்றும் கொழும்புக்கான இரவு நேர சேவைகள் என்பன டிசம்பர் 15 முதல் புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என யாழ். மாநகர முதல்வர் அறிவித்துள்ளார்.
இன்று மாலை அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தனியார் பேருந்தின் உள்ளூர் சேவை பஸ்கள் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு, தற்போது இயங்கி வரும் இடங்களில் 10 நிமிடங்கள் தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும். அதே போல் வெளியிடங்களில் இருந்து வரும் பிரயாணிகள் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இறக்கப்படுவர்.
இ.போ.ச பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் வெளிமாவட்டங்களுக்கும், செல்லும் நீண்ட தூரத்திற்கு பயணிக்கும் பேருந்துகள் ஆஸ்பத்திரி வீதியினூடாக சத்திரச்சந்தியை அடைந்து அங்கிருந்து கே.கே.எஸ் வீதியூடாகச் சென்று பிரதான வீதியை அடைந்து வெளிமாவட்டங்களுக்கான பயணத்தினை மேற்கொள்ளும்.
அத்தோடு, வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளும் இப் பாதையையே பயன்படுத்த வேண்டும் என்பதுடன் இப்பாதை ஒழுங்குமுறையானது என உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இ.போ.ச பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் வெளிமாவட்டங்களுக்குச் செல்லும், நீண்ட தூரத்திற்கு
பயணிக்கும் பேருந்துகள் ஆஸ்பத்திரி வீதியூடாக வேம்படிச் சந்திக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.